Monday, August 25, 2008

யாருக்கு


தேவதேவனின் முழு கவிதைத் தொகுப்பையும் படிக்கும் பிரத்தியேக வாய்ப்பு எனக்கு கிடைத்தது।எங்கள் ஊர் நூலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட அந்தப் புத்தகத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் சொல்லி வாங்கிவந்தேன்। மிகவும் கவனிப்புக்குரிய ஒரு முழுத்தொகுப்பாக அது கிடைத்தது। அது மட்டுமல்ல அவரின் கவிதைகள் பார்க்கும் பொருள்களில் எல்லாம் நுண்மையைத் தேடும் தன்மையுடையவனாக இருக்கின்றன. அன்றாட வாழ்வின் மீது கட்டப்பட்ட முடிச்சிகளை லாவகமாக அவிழ்க்கும் ஒரு மந்திரக்காரனின் லாவகம் வாய்ந்த அவரின் எழுத்துக்கள் உண்மையிலே சிறப்பு.


சக்தி ஜோதியின் நிலம் புகும் சொற்கள்

அன்பின் காதலின் சொற்களை ஒரு கோப்பையில் ஊற்றித் தருகிறார் சக்தி ஜோதி। மொழிக்கும் அவருக்கும் உள்ள பரிச்சயம் அவரின் காதலை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறது। தீராத காதலின் கண்கள் ஒரு பால் நிலவைப் போல ஜொலிக்கின்ற வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட காதல் கவிதைகள்। உறுப்புகளை முதன்மைப் படுத்தி எழுதப்பட்ட பெண் எழுத்துக்கு மாறாக காதலையும் அதனை சேர்க்க வேண்டிய ஆணையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டிருக்கிறது। காதல் கவிதைகள் அகமற்றுப் போன இந்த தருணத்தில் சங்கப் பெண் கவிஞர்களின் முகமெடுத்து வந்திருக்கிறார் சக்தி ஜோதி। காதலின் தருணமும் அதன் கம்பீரமும் ஆண் என்ற புள்ளியிலும் பெண் என்ற புள்ளியிலும் அல்லாது தனித்து அது இருவருக்கும் பொது என்னும் புள்ளியில் ஓர்மைப் படும்போது இப்படி இருக்கும் என்று தோன்ற வைக்கும் கவிதைகள்। தன் காதற்தலைவனைத் தேடி அலைந்த சங்கப்பெண் புலவர் வெள்ளிவீதியைப் போல தன் காதலை காதலன் என்னும் அடர்ந்த வனத்துக்குள் தான் வைத்த இடத்தினின்று நம் எல்லாரையும் தேடவைக்கிறார் ஜோதி। காதலனும் காதலியும் தலைவன் தலைவராகப் போற்றப் பட்ட சங்க மரபிலிருந்து பூ ஒன்று நிலம் புகும் சொற்களாக வந்திருக்கிறது.


Sunday, August 10, 2008

தவிப்பு

அண்மையில் வேலூரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. குமரவேல் என்ற விழுப்புர மாவட்டத்து இளைஞனைத்தேடி அவருடைய தாதாவும் அண்ணனும் வந்திருந்தனர். நடுத்தர விவசாய குடும்பம். அந்த இளைஞன் அப்படி யொன்றும் அழகானவனும் இல்லை. வாலிபத்தின் சாயல் ஏதுமற்று அவன் உள்ளத்தின் ஏக்கம் அவனுக்கு தூக்கத்தை தந்திருக்காது.
திருவண்ணாமலையில் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் கணிப்பொறி நிறுவனத்தில் படித்துக்கொண்டிருந்தவன் திடீரென்று வீட்டுக்கே வரவில்லை என்பதால் மட்டுமல்ல இந்த தேடல் தன்னுடைய பேரன் அரவாணிகளுடன் சேர்ந்துவிட்டான் என்ற செய்தியும் தான் அவர்களை வேலூருக்கு வரவழைத்தது. வரும்போதே அவர்கள் அவனுக்கு லுங்கியும் வாங்கிவந்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
குமரவேலிடம் பேசினேன். இப்படி ஆதரவாக பேசினாலே போதும் பேருந்து நிலையங்களிலும், தொடர்வண்டிகளிலும் கடைவீதிகளிலும் கைகளைத்தட்டி காசு கேட்கும் அல்லது இருண்ட பிரதேசங்களில் ஆண்களை பாலுறவுக்கு அழைக்கும் அரவாணிகள் உருவாக மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
குமரவேலுக்கு தன்னை ஆணாக உணரும் தருணமே வாய்க்கவில்லை. பெண்கள் மீதே அவனுக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. மாறாக ஆண்களை ஈர்ப்பதிலும் அவர்களோடு இருப்பதிலும் மட்டுமே அவனுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.அதனால்தான் தன் நண்பனுடன் தனி அறை எடுத்து வேலூரில் தங்கியுள்ளான்.
இப்படிப்பட்ட எண்ணம் அவனுக்குத் தோன்றியிருப்பதை அறிந்த அவனுடைய பெற்றோர்கள் குமரவேலுவை புரிந்துக்கொள்ளாமல் அவனைத் துன்புறுத்தியுள்ளனர். அதனால் வெறுப்படைந்த குமரவேல் தன்னைப் புரிந்துக்கொள்ளாதவ்ர்களிடத்திலிருந்து விலகியிருக்க நினைத்து வாய்ப்பும் சூழலும் அமையவே தன்னை அரவாணியாக மாற்றிக் கொண்டு 'அமுதா' வாகி விட்டான்.
அரவாணிகள் உருவாகுவது அவர்களின் தனிப்பட்ட உணர்ச்சி உந்துதலினால் அல்ல மாறாக அவர்கள் மேல் நிகழ்த்தப்படுகிற புறக்கணிப்புகளால். இன்றைய நாகரீக சமுகம் அவர்களை அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள வேண்டும். குடும்பம் அவர்களைத் தங்களில் ஒருவராக நினைக்கவேண்டும். அதை விடுத்து அவர்களை ஒதுக்குவது பாலியியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு அவர்களை துரத்துவது கொடுமை.
அத்தகைய சமுக வன்கொடுமையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சிகள் செய்யப் படவேண்டும். முதன்முதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரவாணிகளுக்காக அமைப்பினைத் தொடங்கியிருப்பதை பாராட்டவேண்டும்
அரவாணிகளும் வெறும் பாலுணர்ச்சிக்காக மட்டும் வாழபவர்கள் தாம் என்பதை விடுத்து சாதாரண மனிதர்களைப் போல எல்லாவழிகளிலும் நடக்க வேண்டும். விஜய் தொலைக்காட்சியில் வருகின்ற இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சி நல்ல முயற்சி. அரவானிகள் மேல் அது சமுகத்தின் பாரவையினை மாற்றியிருக்கிறது

Wednesday, August 6, 2008

கேள்வி

வணக்கம்.
தமிழிலக்கிய உலகம் இன்று எப்படி உள்ளது என்று ஆராய்வார்களேயானால் மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் தமிழுக்கும் தமிழனுக்குமான அடையாளங்களாக இருக்கின்ற பண்டைய இலக்கியங்களானாலும் சரி இன்றைய நவீன இலக்கியமாக ஆனாலும் சரி வாசிக்க ஆளில்லாமல் தவிக்கிறது. தற்போது எழுதிக்கொண்டிருப்பவர்களையே இன்னும் சரியாக படிக்க முடியாத போது புதிதாக எழுத்துப் புலியின் வாலைப் பிடித்தவர்ளின் கதை என்னவாகும்? யாராவது சொல்லுங்கள்

Friday, August 1, 2008

அன்பின் வழியது உயிர்நிலை

வணக்கம்.

பறை என்னும் இந்த இணையத்தின் வழி உங்கள் விழிகளிலும் மனதிலும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எத்தனையோ விஷயங்கள் நமக்குள் இருக்கின்றன சொல்வதற்கும் கேட்பதற்கும். எல்லாவற்றின்மீதும் என் கருத்துக்களை கூறுவேன்.
யாழன் ஆதி