Monday, November 24, 2008

எண்தேர் செய்யும் தச்சன்


2008 ஆகத்து மற்றும் அக்தோபர் தலித் முரசு இதழ்களில் தலித்சூழலில் ஒரு புதிய உரையாடலைத் துவக்கியிருக்கிறார் பேராசிரியர் அய்.இளங்கோவன். வேலூர் ஊரிசுக்கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவாராக இருக்கும் இவர் சில நேரங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசப்படுவர். அப்படி தொற்றிக்கொள்ளும் பரபரப்பின் அழுத்தத்தில் அன்றைய மாலை இதழ்கள் மற்றும் மறுநாளைய காலை இதழ்களில் உயர்நீதிமன்ற முக்கியமான தீர்ப்பினை படிக்கலாம். ஒரு இயக்கம் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் தான் ஒருவரே இழுத்துப்போட்டுக்கொண்டுச் செய்யும் அவரின் தனித்தன்மை எண்ணற்கரியது. நிரப்பப்படாமல் இருந்த 500 க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கான விரிவுரையாளர் பதவியை போட வேண்டி இவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில்தான். ஆனால் தமிழக அரசு தானே வழங்கியதாக தம்பட்டம் அடித்துக்கொள்வது கொடுமை. புதிய புதிய செய்திகளைச் சிந்தித்து அவற்றை நடைமுறைப் படுத்த தேவையான தரவுகளைத் திரட்டிக் கொண்டு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் இவர் தயாரித்த வழக்கின் பிரதிகள்.
எழுத்தால் அசைக்க முடிந்த நீதியின் இருண்ட பக்கங்களை தன் பலங்கொண்ட மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் திருப்ப நினைப்பவர் அய்.இளங்கோவன்.தன்னுடைய வருவாயின் பாதிக்குமேல் அதற்காகவே பயன்படுத்துபவர்.
மேற்கூறிய இதழகளில் காலங்காலமாய் பேசப்பட்டுவந்த இடஒதுக்கீட்டின் பயன்பாட்டினால் ஏற்பட்ட குறைந்த பட்ச மாற்றங்களினால் பிரதித்துவம் என்ற சனநாயக அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அறைகூவல் பொது புத்தியை நோக்கி விடப்பட்டுள்ளது.தனியார் துறைகளில் இடஒதுக்கீடு கேட்பது என்பது எவ்வளவு நியாயம்? இன்றைக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் கறுப்பினத்தைச் சார்ந்த ஒபாமா கோலோச்ச வருவது என்ற மாற்றம் இன்று நேற்று வந்ததல்ல. ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாய் இருக்கிறோம் என்று உணர்ந்த காலத்திலிருந்து தொடங்கியது அது. மார்டின் லூதர்கிங், மால்கம் எக்ஸ் போன்ற போராளிகள் எத்தனையோ கறுப்பின எழுத்தாளர்கள் நெல்சன் மண்டேலா போன்றோர் ஏற்படுத்திய எழுச்சிதான் அது. அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் கறுப்பின மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. தனியார் துறைகளில் ஜி இ சி போன்ற பெரும் நிறுவனங்களில் எல்லாம் நிர்வாக அமைப்பில் கறுப்பின மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவற்றின் உச்சப்பட்சமாகத்தான் ஒபாமாவின் தேர்வு.ஆனால் இத்தகைய நிலை இந்தியாவில் இல்லை. தலித் மக்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை அரசுத்துறைகளில் மட்டுந்தான் கேட்கிறார்கள். அதுவே இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தனியார் துறை இடஒதுக்கீடுப் பற்றி பேசப்பட்ட்து. பல்வேறு உயர்சாதி பார்ப்பன பனியா நிறுவனங்கள் தகுதி திறமை என்ற சொற்களை வைத்து அரசின் வாயை அடைத்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் இன்னும் 17 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் விடியலை சுமந்து வரும் ஒற்றைச் சூரியனைப்போல ஒரு குரல் ஓங்கிக் கேட்கிறது. இடஒதுக்கீட்டின் நிலை சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியுள்ளது? முழுமையாக நிறைவேற்றப்படுகின்றதா? உரிமைகளுக்காக போராடும் இந்தியச் சிறுபான்மையர்கள் தலித் மக்களின் உரிமைகளை மதித்தார்களா என்பது தான் அந்தக் குரல். சிறுபான்மை மக்கள் நடத்தும் நிறுவனங்களில் யாரும் தலையிட முடியாது என்ற தருக்கம் தாண்டி அறங்களை தன் பக்கம் வைத்துக்கொண்டுதான் அது தனித்து துணிந்து உரைக்கிறது.மக்களால் தரப்படும் வரிப்பணத்தில் பெறப்படும் சலுகைகளின் அடிப்படையில் இந்நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அரசின் சாலைகள், அரசு தரும் ஊதியம் இவற்றைப் பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள் தங்களை சிறுபான்மை மக்களுக்கானவைகளாக மட்டுமே காட்டிக்கொள்கின்றன. இன்னும் சொல்லப் போனால் தங்களுக்கு எதிரானவர்களையே தலைமைப்பொறுப்புகளுக்கும் கொண்டுவைத்திருக்கின்றன என்றால் அது பொய்யில்லை.
இத்தகு சூழ்நிலையில் தான் திரட்டிய தரவுகளை முன்வைத்து சிறுபான்மை நிறுவனங்கள் எங்ஙனம் தலித்துகளின் உரிமைகளுக்கும் அவர்களுக்கான பிரதிநிதித்துவ முன்னுரிமைக்கும் இடைஞ்சலாக இருக்கின்றன என்பதை தெள்ளிதின் கூறியுள்ளார். அது முழுமையும் உண்மையாகவும் மறுக்கமுடியாத்தாகவும் இருக்கிறது என்பது அப்பட்டமான மெய். பேரா.அய்.இளங்கோவன் அவர்களின் இத்தகைய தனித்துவமான உண்மைக்காய் ஓங்கி ஒலிக்க கூடிய குரல் மனசாட்சியின் சத்தமாய் வீறிட்டு கிளம்பி நீதிமன்றத்தின் தீர்ப்பு மேசைகளில் அசைகிறது. இதுவரை எத்தனையோ பொதுநல வழக்குகளில் வெற்றிப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைகளை தந்தாலும் தன்னை முன்னிருத்திக் கொள்ளாத அவரின் பெருந்தன்மை மிகுந்த போற்றுதலுக்குரியது.
புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதைப்போல தேரை பின்னுக்குத் தள்ளாமல் முன்னுக்குத்தள்ளுவதில் முதன்மயான்வராகவும் புதிய புதிய தேர்களைச் செய்யக்கூடியவராகவும் விளங்கிவருபவர் பேரா.அய்.இளங்கோவன் அவர்கள்.