Tuesday, March 31, 2009

கூத்தும் கூத்து சார்ந்த கொடுமையும்



ஒரு வழியாக முடிந்தது போலிருக்கின்றது தொகுதி உடன்பாடுகள். திமுக அணியும் அதிமுக அணியும் முடிவுற்ற சூழல் நிலவுகிறது. வழக்கம் போல தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும்
சண்டைவிடும் வேலையை இரு கழகங்களும் செய்து முடித்திருக்கின்றன. அணி மாறி போட்டியிட மாட்டோம் என்று முழுமையாக ராமதாஸை நம்பிய திருமா தொகுதி மாறிக்கூட
போட்டியிடாத ராமதாஸின் தமிழ் தேசிய உணர்வினை இன்னும் நம்புவார் என்று நினைக்க முடியவில்லை. ஈழத்தமிழர் பிரச்சினையினை தேர்தல் பிரச்சினையாக வைக்க
இனி ஜெயலலிதாவை தவிர யாரும் இல்லை என்னும் நிலையைத்தான் உருவாக்கி வைத்திருக்கின்றனர். யாரிடம் தமிழர்கள் தங்கள் தேசிய உணர்வினை வெளிப்படுத்த வேண்டுமோ
அவர்கள் சொல்லுவதற்கு இனிமேல் கட்டுபட்டு நடப்பதாக உறுதிக்கூறிய பிறகுதான் அண்ணன் தங்கை பாசமே மலர்ந்திருக்கின்றது. கருணாநிதியிடம் இப்படி ஒரு உறுதியை
ராமதாஸ் தரவில்லையோ. சரி அடுத்த சட்டமன்ற தேர்தலில் மறக்காமல் கருணாநிதி ராமதாஸிடம் இவ்வுறுதிமொழியை வாங்கிவிடுவாராக.
அதிமுக கூட்டணியில் முதன்மைக் கூட்டாளியாக இருந்த மதிமுக இப்போது என்னவாக இருக்கின்றது? தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை திமுக தரவில்லை
என்பதற்காக கடந்த தேர்தலில் திமுக மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வெட்டுருக்களைக்கூட மறந்துவிட்டு இரவோடிரவாக அதிமுக அன்புச்சகோதரியின் கூடாரத்திற்குப் போன
வைகோ இப்போது தன்மான உணர்ச்சியினை எங்கு வைப்பார்? இப்போதுதான் உள்ளே வந்த பாமக விற்கு ஏழு தொகுதிகள் ஒரு மக்களவை என்றும் எந்தெந்த தொகுதிகள்
என்றும் முடிவாக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் அண்ணனுக்கு தயாராக தட்டில் சீட்டுகளை வைத்திருக்கும் சகோதரிக்கு கூடவே இருந்த சின்ன அண்ணன் இன்னும்
போயஸ் தோட்ட சமையலறையின் வாசலில் நிற்பது தெரியாமலே இருக்கின்றது.சட்டமன்றத்தில் எதற்காக வருகிறோம் என்று தெரியாமலேயே அதிமுக உறுப்பினர்கள் வெளியே
வந்த உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களைப்போலவே வெளியே வந்த மதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தையே முற்றுப்பெறவில்லை. கேட்பது எத்தனை கிடைப்பது எத்தனை என்பதனை
உணர்ச்சிப் பெருக்கோடு வைகோ சொல்வார் என எதிர்பார்க்கலாம்.
பொதுவுடைமை தோழர்கள் காங்கிரஸ் சீனாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்திருப்பார்கள் என்றால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினையே கிடையாது. நந்திகிராமில்
விவசாயிகள் மீது அவர்கள் நடத்திய தாக்குதல்தான் நமக்கு ஞாபகம் வந்து தொலையுதே. அவர்களும் சீட்டுக்காகத்தான் இந்த ஆட்டத்தையும் ஆடுகிறார்கள்.அதுமட்டுமல்ல
எனக்கு திடீரென்று இப்போது இன்னொரு பிரச்சினை நினைவுக்கு வருகிறது. மதுரை உத்தபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரை இடிப்பதற்காய் பாடாய் பட்டவர்கள்
அப்போது அதைகுறித்து எந்த ஒரு வார்த்தையும் சொல்லாத ஜெயலலிதா இப்போது எப்படி தோழர்களின் பிள்ளை சமூக எதிர்ப்பை அல்லது தலித் அல்லாத மக்களின்
எதிர்ப்பை தாங்கிக்கொள்வார்? தோழர்கள் இதைகுறித்து எதுவும் பேச மாட்டார்கள் என்று கருதுகிறேன். இருக்கட்டும்.
திமுக கூட்டணி திமுக 21 காங்கிரஸ் 16 விடுதலைச் சிறுத்தைகள் 2 முஸ்லிம் லீக் 1. பீகாரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் வெறும் மூன்று. முக்கிய மந்திரியாக
மத்திய அரசில் அங்கம் வகித்த லாலு ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரஸின் பலத்தை தீர்மானித்து தந்தவை. 80 இடங்கள் உள்ள உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ்
கட்சி ஆட்சியிலிருந்து இறங்காவண்ணம் காத்த கண்ண பரமாத்மா முலாயம் சிங் தர முன்வந்ததோ வெறும் 15 இடம். வடமாநிலங்களிலேயே இவ்வளவு பலவீனப்பட்ட
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 40க்கு 16 ஏன்? அவ்வளவு பலம் உள்ளதா காங்கிரஸ் கட்சி. எத்தனை பேர் இருக்கின்றார்களோ அத்தனைப்பேருக்கு ஒரு கோஷ்டி இருக்கின்றது
தொகுதிக்குப் பிறகு வேட்பாளர் தேர்வுக்குப்பின் பாருங்கள் காங்கிரஸ் வேட்பாளரை காங்கிரஸ் காரர்களே தொகுதிக்குகுள் விடமாட்டார்கள். அத்தகைய ஒற்றுமை வலிமை
கொண்டது. கட்சிக்குள்ளே ஒற்றுமையில்லாத காங்கிரஸ் நாட்டு ஒற்றுமைப் பற்றி என்ன செய்யமுடியும்? அதுவும் தமிழ்நாட்டில் தனித்து காங்கிரஸ் நிற்குமே என்றால்
கட்டுத்தொகையினை இழக்கும் கட்டாயம் அதற்கு வரும். அப்படியிருக்க ஏன் இத்தனை இடங்களை திமுக ஒதுக்கவேண்டும். தன்னுடைய ஆட்சியைக் காக்க பலமில்லாத
காங்கிரஸுக்கு இப்படி வாரி தருவது எப்படி நியாயம். தன்னுடைய பலத்தை விட காங்கிரஸ் அதிக பதவி சுகத்தை அனுபவிப்பது தமிழகத்தில்தான். அதுவும் தமிழர்களின்
உணர்வுகளுக்கு எதிராக இருந்துக்கொண்டே.
தொண்டர் பலமுள்ள கட்சி என்று பார்த்தால் திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் தான். ஆனால் அதற்கு இரண்டே இடங்களைத்தாம்
ஒதுக்கியிருக்கிறார்கள். இதுகூட திருமாவளவனின் அளவு கடந்த பொறுமையினால் கிடைத்தது. அவரின் வழக்கமான உணர்ச்சிவசப்படும் தன்மையினை இந்த முறை
கொஞ்சம் ஒதுக்கிவைத்ததால் வந்தது. திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை பொதுத்தலைமைக்கும் அதுமட்டுமல்ல தமிழ்தேசிய அரசியலை முன் இழுக்கும் தலைமையும்
அவருக்கு வந்து சேர்ந்தது. ஆனால் இந்த கூட்டணி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ்தேசிய அரசியல் தொடங்கிய அவரின் போக்கு தலித்
தோழமைகளை இழந்து நிற்கிறது.கூடவே இருப்பார் என்று கருதப்பட்ட ராமதாஸ் இப்படி மீண்டும் தன் சுய சாதிக்குள்ளேயே அமுங்கிவிடுவார் என்பதை திருமாவளவன்
அறியவில்லை.
இத்தனை கூத்துகளும் அரங்கேறும் இடமாக தமிழக அரசியல் இருக்கின்றது. இதில் தமிழ் சார்ந்த அடையாளமோ தமிழ் அரசியலோ இல்லை என்பது தான் உண்மை. வேறு
எந்த தேசிய இனத்திற்கும் இல்லாத கொடுமை இது. தன் தேசிய தன்மை இல்லாமலே தங்களை ஆளுபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அந்த இனம் பங்கேற்பது.

Thursday, March 26, 2009

பறை: அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்

பறை: அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்

அரசியல் சதுரங்கம்:ஆட்டமிழக்கும் அறம்

பா.ம.க. தன்னுடைய பொதுக்குழுவில் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த முடிவை பெரிய ஜனநாயகத் தன்மையுடையதாகக் காட்டிக்கொண்டு ஓட்டுப்போட்டு அணி மாறியுள்ளது. மிகவும் தனித்தன்மையுடன் அல்லது ஆய்வின் அடிப்படையில் இயங்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது என்றா நம்பிக்கையினை அது மீண்டும் மண் போட்டு புதைத்துவிட்டது.
எந்த விதத்திலும் திமுகவின் தன்மைக்கு குறைந்ததல்ல அதிமுக. அதன் தலைமை அடிக்கும் அரசியல் கூத்துகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சனைக்கூட பொருட்டில்லைதான். இவ்வளவு நாள் எதிர் நிலையிலிருந்துவிட்டு தேர்தல் நெருங்க ஈழத்தமிழர் பிரச்சினை ஒரு வேளை தமிழர்களின் ஓட்டுகளை மாற்றிவிடுமோ என்று செயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ஒருவேளை அது தா.பா அல்லது வைகோ வாக கூட இருக்கலாம் சொல்லிவிட அவரும் ஈழத்தின் பிரச்சினை தீர மத்திய அரசை அவர் வழக்கமாக வசாடும் மாநில அரசைக் கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஈழத்தமிழர் பிரச்சினைதான் இந்த தேர்தலில் தமிழர்களால் முக்கியமானதாக முன்வைக்கப்படும் என்று யார் சொன்னார்கள்? தமிழர்கள் என்ன அவ்வளவு கொள்கைரீதியாக சிந்திக்க கூடியவர்களா? பாவம் அவர்கள். அதைத்தான் இவர்கள் எல்லாம் இலாவகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கிருந்து பேசினால் என்ன எதை பேசினால் என்ன எப்படி பேசினால் என்ன எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் ராமதாஸ் நிறுவிவருகிறார். அவரின் தேர்தல் உத்தி என்று இதை யாராவது சொல்வார்களேயானால் அதற்கு வேறு ஏதாவது சொற்களைத்தான் தேட வேண்டும். காத்திரமாக அல்ல மிகவும் நிதானமாக அவதானித்தே இதைச் சொல்வோம். இவ்வளவு காலம் ஈழத்த்மிழர் பிரச்சினையில் மற்ற தமிழ்தேசிய தன்மையுள்ள இயக்கங்களுடன் கலந்து போராடி தமிழ் அடையாளத்துடன் உலகளவில் தன்னையும் தமிழர்களைக் காக்கும் தலைவராகக் காட்டிக்கொண்டு அரசியல் நடத்திய ராமதாஸ் இப்போது அதை மிகவும் லாவகமாக கைவிட்டார். பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தி இதைச் செய்ததாக மக்களுக்கு அறிவிக்கிறார். என்ன இது? கட்சி மாறுவது என்பது ஏற்கெனவே எடுத்த முடிவு என்று மக்கள் தெரிந்து வைத்திருக்கின்ற ஒன்றை இவர் அறியாததைப் போலவே நடந்துகொள்வது என்பது நாடகமின்றி வேறென்ன இருக்க முடியும்.
காங்கிரஸை விட்டு அவர் வரவில்லை. திமுகவை விட்டுதான் வந்திருக்கிறார். பிரதமர் மன்மோகனுக்கும் சோனியாவிற்கும் கடந்த அய்ந்து ஆண்டுகளாக ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி கூறுகிறார். அப்படி கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பு என்பது பரஸ்பரமானது தானா? தமிழர்களுக்கு எதிரான ஆய்த நடவடிக்கைகளிலும் இந்த ஒத்துழைப்பு இருந்திருக்குமா? நாம் மிகவும் மதித்த ராமதாஸ் அவர்களுக்கு மட்டுந்தான் தெரியும் இது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை செவ்வனே செய்வதற்கு இன உணர்வும் மான உணர்வும் தேவையில்லை. அடிமைத்தனம் இருந்தால் போதுமானது. டில்லியில் இருந்த ஒரு நாளில் கூட ஈழத்தமிழருக்காக அன்புமணி ஒரு போராட்டத்தையும் மத்திய அரசை எதிர்த்து நடத்தவில்லை. மாறாக நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். பீகார் மக்கள் மும்பையில் தாக்கப்பட்டபோது லாலு அவர்கள் செய்த கிளர்ச்சியினை நாம் சிந்திக்க வேண்டும். அதுமட்டுமல்ல காங்கிரஸின் அநீதியைக் கண்டித்து இந்த கூட்டணியில் இடம் பெறவில்லை பாமக. திமுகவைவிட எந்த விதத்தில் அதிமுக நல்லது என்பதையும் தமிழருக்கு சொல்லி அதன் மூலம் அந்த கூட்டணியில் இடம் பிடிக்கவில்லை. சரி, ஈழத்தமிழர் பிரச்சினையை முன்வைத்தா? அல்லது சேது சமுத்திர திட்டத்தினை முன்வைத்தா?அல்லது உயர் மருத்துவம் தொழில்நுட்ப படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டபோது அதை எதிர்த்து பாமக நடத்திய போராட்டத்திற்கு செயலலிதா ஆதரவு தந்தார் என்பதற்காகவா?
எதுவுமே மருத்துவர் ராமதாஸுக்கோ அல்லது அக்கட்சியின் முன்னணியினருக்கோ தெரியாது.பிறகு எப்படி என்கிறீர்களா? பொதுக்குழுவில் அவருடைய கட்சியினர் ஓட்டு போட்டனர் அதனால்தான்.
இங்கே தான் நமக்கு சந்தேகமே ஆரம்பமாகிறது. சந்தேகமே இல்லாமல் அது மார்க்ஸ் சொன்ன சந்தேகம் தான். பாமக என்பது இன்னும் முழுமையான பொதுவான கட்சியாக இல்லை. அப்படி பொதுவான கட்சியாக இருக்கும் பட்சத்தில் அதன் பொதுக்குழுவில் ஓட்டளித்தவர்கள் எத்தனைப்பேர் வேறு சாதியினர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் அற்ற காலங்களில் அவர் பொதுவான தமிழர்களை வைத்துக் கொள்வார். அதற்கு அத்தாட்சியாக ஒரு தொலைக்காட்சியும் செய்தித்தாளும் இருக்கும். அதில் தமிழ் தேசியவாதிகள் தமிழ் அறிஞர்கள் பனியாளர்களாக இருப்பார்கள். இசை குறித்தும் தமிழ் வளர்ச்சிக் குறித்தும் ஊடக வளர்ச்சிக்குறித்தும் படைப்பாளிகள் சங்கம் குறித்தும் தன்னுடைய ஊடகத்திற்கு போதுமான விளம்பரம் பெறுவது குறித்தும் பெரிதும் அவர் விவாதிப்பார். கல்வி குறித்து விவாதிக்க கல்வியாளர்களையும் அழைப்பார். உண்ணாவிரதம் இருந்து திருமாவளவன் போராடினால் ஓடிவந்து குளிர்பானம் கொடுத்து அவருடைய போராட்டத்தை முனைமழுங்க செய்வார். இதெல்லாம் செய்துவிட்டு தேர்தல் என்று வந்தால் இவர்களிடையே கருத்துக்களைக் கேட்காமல் தன் கட்சியின் பொதுக்குழுவில் தஞ்சம் அடைவார். அவர்கள்தான் வேலை செய்யப்போகிறவர்கள். யார் அவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல சாதிக்காரர்கள். தன்னுடைய சாதி என்னும் குறுகிய வட்டத்திற்குள் அவர் சென்றுவிடுவது வாடிக்கையாக இருக்காது. அது வழக்கமானது. தமிழ் அறிஞப் பணியாளர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஈழப்பிரச்சினையில் கருணாநிதிக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கின்றதோ அவ்வளவு பொறுப்பு ராமதாஸுக்கும்தான் இருக்கிறது. அதிகாரத்தின் போதையை கடைசி சொட்டுமட்டும் சுவைத்து விட்டு இன்று பரிசுத்த ஆவியால் துடைக்கப் பட்டவர்களைப் போல அவர்கள் மாறியிருக்கிறார்கள். தமிழருக்கும்,தமிழ்தேசியத்திற்கும் பகுத்தறிவுக்கும் எவ்வளவு காங்கிரஸ் விரோதியோ அதைவிட பன்மடங்கு விரோதி செயலலிதா.அவரின் இந்துத்த தன்மை வெளிப்ப்டையானது. யாருக்கும் எதற்கும் அஞ்சாதது. அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஒரு வேளை பாஜகவுக்கு வருமேயானால் இப்போது கூட இருக்கும் நட்புகளை விட்டுவிட்டு சென்று விடுவதற்கு அவருக்கு தயக்கமே இருக்காது. எங்கே பிராமணன் என்று சோவை விட்டு ஜெயா தொலைக்காட்சியில் வருவது இன்னும் சில நாட்களில் மக்கள் தொலைக்காட்சியில் வந்தால் பாவம் தமிழ்ப்பண்ணையில் சந்திப்பிழைகளுக்கெல்லாம் சண்டை போடும் நன்னர்கள் என்ன செய்வார்களோ?இதைவிட முக்கியமான அக்கறை நமக்கொன்று உண்டு திருமாவளவன் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அது.

Saturday, March 21, 2009

பறை: சினிமாவின் அரசியல்

பறை: சினிமாவின் அரசியல்

Thursday, March 19, 2009

சினிமாவின் அரசியல்


தமிழகத்தின் வரலாற்றை பிற்காலங்களில் எழுதக்கூடியவர்கள் அதற்கும் திரைபடத்திற்கும் உள்ள தொடர்பை எழுதாமல் நிறைவு செய்ய முடியாது. ஒரு மொழியின் இலக்கிய படைப்புகளிலிருந்து அதனோடு ஒட்டிய சமூக வரலாற்றையும் நம்மால் அறிய முடியும். ஆனால் இங்கே வரலாறு என்பது வேறாகவும் மொழி மற்றும் அதன் படைப்புகள் என்பவை வேறாகவும் இருக்கிறது. படித்தலினால் கிடைக்கும் அனுபவம் என்பது பார்த்தலின்போது வேறு வடிவமாக உறுதியானதாக வாசகன்/பார்வையாளன் மனத்தில் தங்குகிறது. இந்த அளவுகோலின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சமுகவரலாற்றோடு திரைப்படங்களுக்கு இருக்கும் இயைபும் அல்லது முரணும் அவை நமக்குள் நிகழ்த்தும் சலனங்களின் தன்மையிலும் நாம் சினிமாவை அனுகவேண்டியிருக்கிறது.இலக்கியம் சார்ந்து அல்லது திரைசார்ந்து வரும் ஊடகங்கள் உலகத்தின் பல்வேறு மொழிகளில் வரக்கூடிய சிறந்த திரைப்படங்களை ஆராதிப்பது அல்லது அவற்றின் தரம் பற்றிய உரையாடல்களை உருவாக்குவது என்பவை போன்றுதான் வினையாற்றுகின்றன. அதுமட்டுமில்லாமல் அகிராகுரோசா அல்லது இந்திய அளவில் சத்தியஜித்ரே மிருணாள் சென் என்றுதான் படைப்புகளை உருவாக்குகின்றன. திரைப்படப் பயிற்சிப் பட்டறைகள் இந்தவகையிலேயே நடத்தப்படுபவனாக இருக்கின்றன. உலக திரைப்படங்களையும் சில குறும்படங்களையும் வைத்துக்கொண்டே அவை ஒப்பேற்றப்படுகின்றன என்று சொல்லலாம்.வெகுமக்கள் சினிமாகவாக அறியப்படும் சினிமா சம்பந்தமான உரையாடல்கள் வெறுமனே திரை விமர்சனம் என்னும் பெயரில்தான் தமிழ் ஊடகங்களில் நடத்தப்படுகின்றன. மாற்றுத் திரைப்படங்களில் செலுத்தப்படும் கவனம் மக்களை நேரிடையாக சென்றடையும் வியாபாரச் சினிமாக்களை குறிவைப்பதில்லை. இதனால்தான் தமிழ்சினிமா என்பது இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு ஒட்டுமொத்த வடிவத்தைப் பெற்று இருக்கிறது.உலகமயமாக்கல் சூழலில் செல்லுலாயிடில் சொல்லப்படும் கலைகள் கூட உலகமயமாக்கப் பட்டபின் அந்ததந்த இன மக்களின் திரைப்படங்கள் என்ற வட்டத்திலிருந்து விலகி உலக சந்தையை மனதில்கொண்டு காட்சி அமைப்புகள்,பாத்திரங்களின் செதுக்கல், உணவு வகைகள், உரையாடல்கள் (சில தமிழ்ப்படங்களில் ஆங்கிலப் படங்களைவிட அதிகமான ஆங்கில வசனங்கள் இருக்கும்) ஆகியவை அமைக்கப்படுகின்றன. படத்திற்கே கொஞ்சமும் தொடர்பேயில்லாத ஒரு சூழலில் எங்கோ ஒரு வெளிநாட்டில் நம்முடைய கதாபாத்திரங்கள் நடனமாடிக்கொண்டிருக்கின்றன.ஆனால் பின் காலனிய அரசியல் பின்புலத்தோடு 1930களுக்குப் பின் பேசும்படங்கள் உருவாக்கப்பட்ட பின் நம்முடைய திரைப்படங்கள் சமுகத்தின் முக்கிய பங்காளியாக மாறி இருக்கின்றன. ஆரம்ப காலங்களில் புராணங்களை சுட்டு தள்ளிய இந்திய கேமிராக்களின் தாக்கம் தமிழையும் விட்டு வைக்கவில்லை. வெளிநாடுகளில் அக்காலங்களில் இந்தி மற்றும் இந்துத்துவ தன்மையுள்ள படங்களே இந்திய திரைப்படங்களாக அறியப்பட்டிருக்கின்றன. இதிலிருந்தே தமிழ் திரைப்படங்களின் அணுகுமுறை தொடங்கியிருக்கின்றன. பேசும்படங்கள் வந்தபின் மட்டுமே தமிழ் சினிமா என்ற வகைமை உருவானது. அதுவரை அது இந்திய தேசிய சினிமாகவே இருந்தது. ஆனால் தமிழின் மிகப்பழைமையான இலக்கியத்தொன்மையின் நிழலிருந்து நம் படங்கள் தொடங்கியிருக்குமேயானால் மிகச்சீர்பட்ட வெகுமக்கள் திரைப்படங்கள் தமிழில் உருவாகியிருக்க நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கும். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற பெரும் காப்பியங்களிலிருந்தும் அக இலக்கியங்களிலிருந்தும் தமிழ் சினிமா வேர் கொண்டிருந்திருந்தால் அதன் திசை உலக சினிமா என்ற தளத்தை அடைந்திருக்கும். மாறாக இந்தியாவின் புராணங்களான ராமாயாணம், மகாபாரதத்திலிருந்தே திரைப்படங்கள் உருவானதால்தான் மூடநம்பிக்கைகள் நிறைந்த அல்லது சமுக யதார்த்தத்தின் எதிர்நிலைப் படங்களே இங்கே குவிக்கப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் மாற்றங்கள் இந்திய தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் மேற்கொள்ளப்பட்ட போதுதான் தமிழ் வெகுமக்கள் சினிமா என்பது அரசியல் கருத்துடன் புலப்பட ஆரம்பித்தது. அதன் நீட்சி 1970 களின் இறுதிவரை தென்பட்டது, இந்தியை இந்தியாவின் ஒரே மொழியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழகத்தில் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கமானது சுயமரியாதை மற்றும் இனவாரியான பிரதிநிதித்துவம் ஆகியவற்றை பேசிக்கொண்டிருந்த வேளையில் மொழி ஒரு அரசியல் ஆயுதமானது. தமிழ் தேசிய பிரகடனம் அதைத் தொடர்ந்து பெரியார் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு ஆகியவை தமிழ் சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியத்தன்மையை பேசி வந்த சினிமா தமிழ் இயக்கங்களின் குறிப்பாக திராவிட இயக்கங்களின் கொள்கையைப் பின்பற்றி இயங்கத்தொடங்கின. திரைப்படங்களின் பெயர்கள் , கதைப்பாத்திரங்களின் பெயர்கள் ஆகியவையும் அரசியலுடன் கலந்ததாகவே இருந்தன. 1970 எழுபதுகளில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவற்றின் மூலம் பெரும் மக்கள் சந்திப்பை நிகழ்த்த முடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆழமாக நம்பியது. அதன் முதல் தலைவரான அண்ணா அவர்கள் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.'சென்சார் இல்லாமல் ஒரு படத்திற்கு அரசு அனுமதி தருமேயானால் ஒரே படத்தில் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்' என்றார். அதனால்தான் இயற்கையாகவே மொழி அறிவும் பிரதிகளின் பலமும் உள்ள திராவிட இயக்கங்களின் தலைவர்கள் சினிமாவை தன் அண்ணன் வழியில் கைப்பற்றினர்.கதைகளிலும் வசனங்களிலும் தற்போதைய முதல்வர் கருணாநிதி கோலோச்ச நடிப்பிலும் நாயகத்தன்மையிலும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ஆண்டார். இன்னும் சில நடிகர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டு திமுக வில் இணைய திமுக நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் பயன்படுத்திக்கொண்டது. அண்ணாவின் இதயக்கனியானார் எம்.ஜி.ஆர். 'தம்பி உன் முகத்தைக் காட்டு; ஒரு லட்சம் ஓட்டு' என்று அண்ணாவால் வேண்டுகோள் விடப்பட்டவரானார். அண்ணாவின் மறைவுக்குப்பின் திமுக பிளவுபட்டது. எந்த சினிமா திமுகவின் வளர்ச்சிக்கு தேவைப்பட்டதோ அதே சினிமா தான் எம்ஜிஆரின் அதிமுக வுக்கும் பயன்பட்டது. அவர் மறையும் வரை அவரே முதல்வராக இருந்தார். கர்மவீரர் என்று போற்றப்படும் காமராஜர் தன்னுடைய பொதுவாழ்வில் தூய்மையானவர் என்று பெயர் பெற்றவர். 'நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்று கூறிய அவரை தமிழக மக்கள் தோற்கடித்தனர். ஆனால் உண்மையிலே உடல்நிலை சரியில்லாத காலத்தில் அமெரிக்காவில் இருந்தபடியே எம்ஜிஆரால் வெற்றிப்பெற முடிந்தது என்றால் திராவிட இயக்கங்கள் எத்தகு வலுவோடு சினிமாவை தனக்கானதாகப் பயன்படுத்திக்கொண்டன என்பதை அறிவது மிக எளிது. இத்தகைய போக்கால் உண்மையான சினிமா வடிவம் தமிழர்களுக்கு அறிமுகமாகாமல் அல்லது அத்தகைய படங்களை ரசிக்கும் மனோபாவமே இல்லாமல் தமிழ் ரசிகன் தடுக்கப்பட்டான். அப்படி ஏதாதவது கலைத்தன்மையுள்ள படம் வருமே என்றால் அது 'கலைப் படம்' என்றும் முத்திரைக்குத்தப்பட்டு புதிய சினிமா வகை ஒன்று உருவானது 'வியாபார சினிமா'. இதைப் பார்ப்பவர்கள் அதைப் பார்க்கமாட்டார்கள் அதைப் பார்ப்பவர்கள் இதைப்பார்க்க மாட்டார்கள் அதே போலத்தான் படமெடுப்பவர்களும். மொத்தமாக சினிமா என்பதன் உண்மையான பொருள் என்னவென்றே அறியப்படாமல் போனது. இன்னொரு மோசமான விளைவைக்கூட நாம் அனுபவிக்கிறோம். ‘நாயக வழிப்பாடு' இன்றைக்கும் முதல்வராகும் கனவோடு கோடம்பாக்கத்தில் எத்தனைப் பேர் அலைகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? சமுக அரசியல் தளத்தின் பிரதிமை ஏதாவது தற்கால வெகுமக்கள் சினிமாவில் தெரிகிறதா என்றால் இல்லை. வரும் ஒருசில படங்களைத்தவிர்த்து பார்த்தால் அதே ஒற்றைத்தனமாக கதை நாயகன் கோபப்படுவதும் அதற்காக எதிரிகளை துவம்சம் செய்வதும் அதற்காக கையில் ஒரு சூலாயுதம் நெற்றியில் பெருவிரலால் மேல் நோக்கி இழுக்கப்பட்ட குங்குமப்பொட்டு என புறப்படுவதும் என்று இந்துத்துவ மனநிலையை விரிக்கின்றவையாக இருக்கின்றன. தலித் அரசியல், தலித் இலக்கியம் என தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை நிறுவி இருக்கின்ற இந்தத் தருணத்தில் தலித் சினிமா என்ற பேச்சே இன்னும் எழவில்லை. தலித் மக்கள் சம கால திரைப்படங்களில் காட்டப்படுவது குறித்தும் நாம் பேசவேண்டியிருக்கிறது. வீதி கூட்டுபவர்கள், மலம் அள்ளுபவர்கள் என்று ‘காமெடி'க்காக பயன்படுத்தப்படுவர்களாகவே அவர்கள் சித்தரிக்கப்படுகின்றனர். ஒரு சேரிக்குள் சென்ற விவேக் அங்கே வாழுகின்ற மக்களை நையாண்டி செய்வதும் அவர்கல் மேல் துர்நாற்றம் வீசுகிறது என்பதும், எவ்வளவு சொன்னாலும் அந்த வடிவேல் ‘சண்டாளா' என்ற சொல்லை வசவு சொல்லாகவே இன்னும் பயன்படுத்துகிறார் என்பதும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. வியாபாரத்தை முன்வைத்து தயாரிக்கின்ற படமாக இருந்தாலும் இன்றைக்கும் தொழில் நுட்பங்கள் மிகைந்துள்ள போதும் திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் தலித்துகளேயாவார்.அதுமட்டுமல்ல அனைத்துக் கதாநாயகர்களுக்கும் வண்ணக்காகிதம் முதல் பெரிய பெரிய நட்சத்திரங்களைக் கட்டுபவர்களும் இவர்கள்தான். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்கள் எதுவும் தமிழில் சரியாக வரவில்லை.இதே போன்று இன்னொன்றையும் நாம் நோக்க வேண்டும். தமிழில் குழந்தைக்களுக்கான திரைப்படங்களின் நிலை என்ன? குழந்தைகள் இன்றைய திரைப்படங்களைப் பார்த்தே சாதி,மதம், வன்முறை போன்றவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். குழந்தைகளின் உலகத்தை தேடுகின்ற படங்கள் எதுவுமே இங்கு வரலில்லை. பெரியவர்களுக்கான படமாக எடுக்கப்படுவதையே அவார்களுக்கானதாகவும் கருதிக்கொள்வதால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.எங்கள் கிராமத்தில் ஒன்பதாவது படிக்கின்ற மாணவன் தன்னுடைய பாட்டி செத்துப்போன துக்கத்தை கொண்டாடும் பொருட்டு அருகிலுள்ள மதுக்கடையில் பீர் ஒன்றை வாங்கி தன் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டு துக்கத்தைப் போக்கியிருக்கிறான் என்றால் அந்தக் காட்சி படிமம் எப்படி அவன் மனதுக்குள் பதிந்தது? தற்போது இருக்கிற திரைப்படங்களே அதற்கு முதல் காரணியாக இருக்கமுடியும் என்பதுதான் பதிலாக இருக்கமுடியும். சில திரைப்படங்களிலே பாடல் காட்சிகளில் காட்டப்படும் குழந்தைக்காதல் பள்ளிகளில் காதல் புரிவதற்கு மாணவர்களுக்கு உந்துதலை தந்து இருக்கின்றன.இருப்பினும் சில நல்ல படங்களும் அவ்வப்போது தலைக்காட்டாமல் இல்லை. மொழி, பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம்,தனம்,ராமன் தேடிய சீதை ஆகியவை வாழ்வையும் களத்தையும் வெளிப்படுத்தக்கூடிய படங்களாக அமைந்திருக்கின்றன. தற்போதைய இயக்குனர்களும் முன்பு போலில்லாமல் மிக்க வாசிப்பு அனுபவமும் வரலாற்று அறிவோடும், மண்ணோடு தொடர்புடையவர்களாகவும் வந்திருக்கின்றனர். எனவே மாற்று சினிமா என்ற சொல்லாடலின் இறுக்கத்தில் நம்மால் வெகுமக்கள் சினிமாவைப் புறந்தள்ள முடியாது. வெகுமக்களுக்கானதை உண்மையாகவே மக்களுக்கானதாக மாற்றுவோம்.விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி என்ற இலக்கியக் கோட்பாடு சினிமாவிலும் செல்லுபடியாகும்.

Sunday, March 15, 2009


என்னுடைய கடந்த பதிவு டிசம்பரில் ஏற்றப்பட்டது. அதற்குப் பிறகு எழுதுவதற்கு நிறைய செய்திகள் கைவசம் இருக்கிறது. ஆனாலும் சொல்லமுடியாத மனத்தடை என்னை ஒருவகையில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு ‘சோம்பேறித்தனம்’ என்று நீங்கள் பெயர் வைப்பீர்களானால் அதை மறுக்க என்னால் முடியாது. இனிமேல் தொடர்ந்து எழுதவேண்டும் என்னும் எண்ணத்துடன் இருக்கிறேன். ‘அய்யா எப்படிங்கய்யா தொடர்ந்து எழுதறது?’ என்று எதேச்சையாக எழுத்தாளர் நாகூர் ரூமியிடம் கேட்டேன். என்னுடைய குரு ஸ்தானத்தில் அவரை வைத்திருக்கிறேன். அவர் மிகவும் சாதரணமாக ஒரு ரொட்டியைக் கிழித்து மீன் மசாலாவில் தொட்டுவிட்டு வாயில் போட்டுக்கொண்டே சொன்னார். ‘உக்கார்ந்து எழுதவேண்டும்’ ரூமியின் எழுத்தில் மட்டுமில்லை அவருடைய பேச்சிலும் இப்படி சாதாரணமாக வந்து விழும் நகைச்சுவை என்னை நிறைய சிந்திக்கவைத்து இருக்கின்றன. அவரின் அடுத்த வினாடி அப்படித்தான் தமிழ்வாசகர்களை சுண்டிவைத்திருக்கிறது. உட்கார்ந்து எழுதுவது என்பதின் ஆழ்ந்த பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்.
ரூமியின் தொடர்ந்த நூல் வரிசையில் அடுத்து வந்து சேர்ந்திருக்கின்றது value education என்னும் புதிய ஆங்கில நூல். கல்லூரி பாட்திட்டத்தில் மதிப்பீட்டுக்கல்வியைப் பாடமாக வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கு தேவையான பாடப்புத்தகம் எதுவும் இன்னும் சரியாக வரவில்லை. ஒருவேளை பாட்திட்டமே வகுக்கப்படாவில்லையோ என்னவோ தெரிய வில்லை. ஆனால் இந்த புத்தகம் அந்த தேவையை தீர்க்கிறது. அதன் பிரிவுகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக உள்ளன. இந்த புத்தகம் கதவுகள் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வருகிறது.