Thursday, March 19, 2009

சினிமாவின் அரசியல்


தமிழகத்தின் வரலாற்றை பிற்காலங்களில் எழுதக்கூடியவர்கள் அதற்கும் திரைபடத்திற்கும் உள்ள தொடர்பை எழுதாமல் நிறைவு செய்ய முடியாது. ஒரு மொழியின் இலக்கிய படைப்புகளிலிருந்து அதனோடு ஒட்டிய சமூக வரலாற்றையும் நம்மால் அறிய முடியும். ஆனால் இங்கே வரலாறு என்பது வேறாகவும் மொழி மற்றும் அதன் படைப்புகள் என்பவை வேறாகவும் இருக்கிறது. படித்தலினால் கிடைக்கும் அனுபவம் என்பது பார்த்தலின்போது வேறு வடிவமாக உறுதியானதாக வாசகன்/பார்வையாளன் மனத்தில் தங்குகிறது. இந்த அளவுகோலின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சமுகவரலாற்றோடு திரைப்படங்களுக்கு இருக்கும் இயைபும் அல்லது முரணும் அவை நமக்குள் நிகழ்த்தும் சலனங்களின் தன்மையிலும் நாம் சினிமாவை அனுகவேண்டியிருக்கிறது.இலக்கியம் சார்ந்து அல்லது திரைசார்ந்து வரும் ஊடகங்கள் உலகத்தின் பல்வேறு மொழிகளில் வரக்கூடிய சிறந்த திரைப்படங்களை ஆராதிப்பது அல்லது அவற்றின் தரம் பற்றிய உரையாடல்களை உருவாக்குவது என்பவை போன்றுதான் வினையாற்றுகின்றன. அதுமட்டுமில்லாமல் அகிராகுரோசா அல்லது இந்திய அளவில் சத்தியஜித்ரே மிருணாள் சென் என்றுதான் படைப்புகளை உருவாக்குகின்றன. திரைப்படப் பயிற்சிப் பட்டறைகள் இந்தவகையிலேயே நடத்தப்படுபவனாக இருக்கின்றன. உலக திரைப்படங்களையும் சில குறும்படங்களையும் வைத்துக்கொண்டே அவை ஒப்பேற்றப்படுகின்றன என்று சொல்லலாம்.வெகுமக்கள் சினிமாகவாக அறியப்படும் சினிமா சம்பந்தமான உரையாடல்கள் வெறுமனே திரை விமர்சனம் என்னும் பெயரில்தான் தமிழ் ஊடகங்களில் நடத்தப்படுகின்றன. மாற்றுத் திரைப்படங்களில் செலுத்தப்படும் கவனம் மக்களை நேரிடையாக சென்றடையும் வியாபாரச் சினிமாக்களை குறிவைப்பதில்லை. இதனால்தான் தமிழ்சினிமா என்பது இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு ஒட்டுமொத்த வடிவத்தைப் பெற்று இருக்கிறது.உலகமயமாக்கல் சூழலில் செல்லுலாயிடில் சொல்லப்படும் கலைகள் கூட உலகமயமாக்கப் பட்டபின் அந்ததந்த இன மக்களின் திரைப்படங்கள் என்ற வட்டத்திலிருந்து விலகி உலக சந்தையை மனதில்கொண்டு காட்சி அமைப்புகள்,பாத்திரங்களின் செதுக்கல், உணவு வகைகள், உரையாடல்கள் (சில தமிழ்ப்படங்களில் ஆங்கிலப் படங்களைவிட அதிகமான ஆங்கில வசனங்கள் இருக்கும்) ஆகியவை அமைக்கப்படுகின்றன. படத்திற்கே கொஞ்சமும் தொடர்பேயில்லாத ஒரு சூழலில் எங்கோ ஒரு வெளிநாட்டில் நம்முடைய கதாபாத்திரங்கள் நடனமாடிக்கொண்டிருக்கின்றன.ஆனால் பின் காலனிய அரசியல் பின்புலத்தோடு 1930களுக்குப் பின் பேசும்படங்கள் உருவாக்கப்பட்ட பின் நம்முடைய திரைப்படங்கள் சமுகத்தின் முக்கிய பங்காளியாக மாறி இருக்கின்றன. ஆரம்ப காலங்களில் புராணங்களை சுட்டு தள்ளிய இந்திய கேமிராக்களின் தாக்கம் தமிழையும் விட்டு வைக்கவில்லை. வெளிநாடுகளில் அக்காலங்களில் இந்தி மற்றும் இந்துத்துவ தன்மையுள்ள படங்களே இந்திய திரைப்படங்களாக அறியப்பட்டிருக்கின்றன. இதிலிருந்தே தமிழ் திரைப்படங்களின் அணுகுமுறை தொடங்கியிருக்கின்றன. பேசும்படங்கள் வந்தபின் மட்டுமே தமிழ் சினிமா என்ற வகைமை உருவானது. அதுவரை அது இந்திய தேசிய சினிமாகவே இருந்தது. ஆனால் தமிழின் மிகப்பழைமையான இலக்கியத்தொன்மையின் நிழலிருந்து நம் படங்கள் தொடங்கியிருக்குமேயானால் மிகச்சீர்பட்ட வெகுமக்கள் திரைப்படங்கள் தமிழில் உருவாகியிருக்க நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கும். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற பெரும் காப்பியங்களிலிருந்தும் அக இலக்கியங்களிலிருந்தும் தமிழ் சினிமா வேர் கொண்டிருந்திருந்தால் அதன் திசை உலக சினிமா என்ற தளத்தை அடைந்திருக்கும். மாறாக இந்தியாவின் புராணங்களான ராமாயாணம், மகாபாரதத்திலிருந்தே திரைப்படங்கள் உருவானதால்தான் மூடநம்பிக்கைகள் நிறைந்த அல்லது சமுக யதார்த்தத்தின் எதிர்நிலைப் படங்களே இங்கே குவிக்கப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் மாற்றங்கள் இந்திய தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் மேற்கொள்ளப்பட்ட போதுதான் தமிழ் வெகுமக்கள் சினிமா என்பது அரசியல் கருத்துடன் புலப்பட ஆரம்பித்தது. அதன் நீட்சி 1970 களின் இறுதிவரை தென்பட்டது, இந்தியை இந்தியாவின் ஒரே மொழியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழகத்தில் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கமானது சுயமரியாதை மற்றும் இனவாரியான பிரதிநிதித்துவம் ஆகியவற்றை பேசிக்கொண்டிருந்த வேளையில் மொழி ஒரு அரசியல் ஆயுதமானது. தமிழ் தேசிய பிரகடனம் அதைத் தொடர்ந்து பெரியார் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு ஆகியவை தமிழ் சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியத்தன்மையை பேசி வந்த சினிமா தமிழ் இயக்கங்களின் குறிப்பாக திராவிட இயக்கங்களின் கொள்கையைப் பின்பற்றி இயங்கத்தொடங்கின. திரைப்படங்களின் பெயர்கள் , கதைப்பாத்திரங்களின் பெயர்கள் ஆகியவையும் அரசியலுடன் கலந்ததாகவே இருந்தன. 1970 எழுபதுகளில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவற்றின் மூலம் பெரும் மக்கள் சந்திப்பை நிகழ்த்த முடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆழமாக நம்பியது. அதன் முதல் தலைவரான அண்ணா அவர்கள் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.'சென்சார் இல்லாமல் ஒரு படத்திற்கு அரசு அனுமதி தருமேயானால் ஒரே படத்தில் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்' என்றார். அதனால்தான் இயற்கையாகவே மொழி அறிவும் பிரதிகளின் பலமும் உள்ள திராவிட இயக்கங்களின் தலைவர்கள் சினிமாவை தன் அண்ணன் வழியில் கைப்பற்றினர்.கதைகளிலும் வசனங்களிலும் தற்போதைய முதல்வர் கருணாநிதி கோலோச்ச நடிப்பிலும் நாயகத்தன்மையிலும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ஆண்டார். இன்னும் சில நடிகர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டு திமுக வில் இணைய திமுக நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் பயன்படுத்திக்கொண்டது. அண்ணாவின் இதயக்கனியானார் எம்.ஜி.ஆர். 'தம்பி உன் முகத்தைக் காட்டு; ஒரு லட்சம் ஓட்டு' என்று அண்ணாவால் வேண்டுகோள் விடப்பட்டவரானார். அண்ணாவின் மறைவுக்குப்பின் திமுக பிளவுபட்டது. எந்த சினிமா திமுகவின் வளர்ச்சிக்கு தேவைப்பட்டதோ அதே சினிமா தான் எம்ஜிஆரின் அதிமுக வுக்கும் பயன்பட்டது. அவர் மறையும் வரை அவரே முதல்வராக இருந்தார். கர்மவீரர் என்று போற்றப்படும் காமராஜர் தன்னுடைய பொதுவாழ்வில் தூய்மையானவர் என்று பெயர் பெற்றவர். 'நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்று கூறிய அவரை தமிழக மக்கள் தோற்கடித்தனர். ஆனால் உண்மையிலே உடல்நிலை சரியில்லாத காலத்தில் அமெரிக்காவில் இருந்தபடியே எம்ஜிஆரால் வெற்றிப்பெற முடிந்தது என்றால் திராவிட இயக்கங்கள் எத்தகு வலுவோடு சினிமாவை தனக்கானதாகப் பயன்படுத்திக்கொண்டன என்பதை அறிவது மிக எளிது. இத்தகைய போக்கால் உண்மையான சினிமா வடிவம் தமிழர்களுக்கு அறிமுகமாகாமல் அல்லது அத்தகைய படங்களை ரசிக்கும் மனோபாவமே இல்லாமல் தமிழ் ரசிகன் தடுக்கப்பட்டான். அப்படி ஏதாதவது கலைத்தன்மையுள்ள படம் வருமே என்றால் அது 'கலைப் படம்' என்றும் முத்திரைக்குத்தப்பட்டு புதிய சினிமா வகை ஒன்று உருவானது 'வியாபார சினிமா'. இதைப் பார்ப்பவர்கள் அதைப் பார்க்கமாட்டார்கள் அதைப் பார்ப்பவர்கள் இதைப்பார்க்க மாட்டார்கள் அதே போலத்தான் படமெடுப்பவர்களும். மொத்தமாக சினிமா என்பதன் உண்மையான பொருள் என்னவென்றே அறியப்படாமல் போனது. இன்னொரு மோசமான விளைவைக்கூட நாம் அனுபவிக்கிறோம். ‘நாயக வழிப்பாடு' இன்றைக்கும் முதல்வராகும் கனவோடு கோடம்பாக்கத்தில் எத்தனைப் பேர் அலைகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? சமுக அரசியல் தளத்தின் பிரதிமை ஏதாவது தற்கால வெகுமக்கள் சினிமாவில் தெரிகிறதா என்றால் இல்லை. வரும் ஒருசில படங்களைத்தவிர்த்து பார்த்தால் அதே ஒற்றைத்தனமாக கதை நாயகன் கோபப்படுவதும் அதற்காக எதிரிகளை துவம்சம் செய்வதும் அதற்காக கையில் ஒரு சூலாயுதம் நெற்றியில் பெருவிரலால் மேல் நோக்கி இழுக்கப்பட்ட குங்குமப்பொட்டு என புறப்படுவதும் என்று இந்துத்துவ மனநிலையை விரிக்கின்றவையாக இருக்கின்றன. தலித் அரசியல், தலித் இலக்கியம் என தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை நிறுவி இருக்கின்ற இந்தத் தருணத்தில் தலித் சினிமா என்ற பேச்சே இன்னும் எழவில்லை. தலித் மக்கள் சம கால திரைப்படங்களில் காட்டப்படுவது குறித்தும் நாம் பேசவேண்டியிருக்கிறது. வீதி கூட்டுபவர்கள், மலம் அள்ளுபவர்கள் என்று ‘காமெடி'க்காக பயன்படுத்தப்படுவர்களாகவே அவர்கள் சித்தரிக்கப்படுகின்றனர். ஒரு சேரிக்குள் சென்ற விவேக் அங்கே வாழுகின்ற மக்களை நையாண்டி செய்வதும் அவர்கல் மேல் துர்நாற்றம் வீசுகிறது என்பதும், எவ்வளவு சொன்னாலும் அந்த வடிவேல் ‘சண்டாளா' என்ற சொல்லை வசவு சொல்லாகவே இன்னும் பயன்படுத்துகிறார் என்பதும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. வியாபாரத்தை முன்வைத்து தயாரிக்கின்ற படமாக இருந்தாலும் இன்றைக்கும் தொழில் நுட்பங்கள் மிகைந்துள்ள போதும் திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் தலித்துகளேயாவார்.அதுமட்டுமல்ல அனைத்துக் கதாநாயகர்களுக்கும் வண்ணக்காகிதம் முதல் பெரிய பெரிய நட்சத்திரங்களைக் கட்டுபவர்களும் இவர்கள்தான். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்கள் எதுவும் தமிழில் சரியாக வரவில்லை.இதே போன்று இன்னொன்றையும் நாம் நோக்க வேண்டும். தமிழில் குழந்தைக்களுக்கான திரைப்படங்களின் நிலை என்ன? குழந்தைகள் இன்றைய திரைப்படங்களைப் பார்த்தே சாதி,மதம், வன்முறை போன்றவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். குழந்தைகளின் உலகத்தை தேடுகின்ற படங்கள் எதுவுமே இங்கு வரலில்லை. பெரியவர்களுக்கான படமாக எடுக்கப்படுவதையே அவார்களுக்கானதாகவும் கருதிக்கொள்வதால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.எங்கள் கிராமத்தில் ஒன்பதாவது படிக்கின்ற மாணவன் தன்னுடைய பாட்டி செத்துப்போன துக்கத்தை கொண்டாடும் பொருட்டு அருகிலுள்ள மதுக்கடையில் பீர் ஒன்றை வாங்கி தன் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டு துக்கத்தைப் போக்கியிருக்கிறான் என்றால் அந்தக் காட்சி படிமம் எப்படி அவன் மனதுக்குள் பதிந்தது? தற்போது இருக்கிற திரைப்படங்களே அதற்கு முதல் காரணியாக இருக்கமுடியும் என்பதுதான் பதிலாக இருக்கமுடியும். சில திரைப்படங்களிலே பாடல் காட்சிகளில் காட்டப்படும் குழந்தைக்காதல் பள்ளிகளில் காதல் புரிவதற்கு மாணவர்களுக்கு உந்துதலை தந்து இருக்கின்றன.இருப்பினும் சில நல்ல படங்களும் அவ்வப்போது தலைக்காட்டாமல் இல்லை. மொழி, பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம்,தனம்,ராமன் தேடிய சீதை ஆகியவை வாழ்வையும் களத்தையும் வெளிப்படுத்தக்கூடிய படங்களாக அமைந்திருக்கின்றன. தற்போதைய இயக்குனர்களும் முன்பு போலில்லாமல் மிக்க வாசிப்பு அனுபவமும் வரலாற்று அறிவோடும், மண்ணோடு தொடர்புடையவர்களாகவும் வந்திருக்கின்றனர். எனவே மாற்று சினிமா என்ற சொல்லாடலின் இறுக்கத்தில் நம்மால் வெகுமக்கள் சினிமாவைப் புறந்தள்ள முடியாது. வெகுமக்களுக்கானதை உண்மையாகவே மக்களுக்கானதாக மாற்றுவோம்.விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி என்ற இலக்கியக் கோட்பாடு சினிமாவிலும் செல்லுபடியாகும்.

Sunday, March 15, 2009


என்னுடைய கடந்த பதிவு டிசம்பரில் ஏற்றப்பட்டது. அதற்குப் பிறகு எழுதுவதற்கு நிறைய செய்திகள் கைவசம் இருக்கிறது. ஆனாலும் சொல்லமுடியாத மனத்தடை என்னை ஒருவகையில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு ‘சோம்பேறித்தனம்’ என்று நீங்கள் பெயர் வைப்பீர்களானால் அதை மறுக்க என்னால் முடியாது. இனிமேல் தொடர்ந்து எழுதவேண்டும் என்னும் எண்ணத்துடன் இருக்கிறேன். ‘அய்யா எப்படிங்கய்யா தொடர்ந்து எழுதறது?’ என்று எதேச்சையாக எழுத்தாளர் நாகூர் ரூமியிடம் கேட்டேன். என்னுடைய குரு ஸ்தானத்தில் அவரை வைத்திருக்கிறேன். அவர் மிகவும் சாதரணமாக ஒரு ரொட்டியைக் கிழித்து மீன் மசாலாவில் தொட்டுவிட்டு வாயில் போட்டுக்கொண்டே சொன்னார். ‘உக்கார்ந்து எழுதவேண்டும்’ ரூமியின் எழுத்தில் மட்டுமில்லை அவருடைய பேச்சிலும் இப்படி சாதாரணமாக வந்து விழும் நகைச்சுவை என்னை நிறைய சிந்திக்கவைத்து இருக்கின்றன. அவரின் அடுத்த வினாடி அப்படித்தான் தமிழ்வாசகர்களை சுண்டிவைத்திருக்கிறது. உட்கார்ந்து எழுதுவது என்பதின் ஆழ்ந்த பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்.
ரூமியின் தொடர்ந்த நூல் வரிசையில் அடுத்து வந்து சேர்ந்திருக்கின்றது value education என்னும் புதிய ஆங்கில நூல். கல்லூரி பாட்திட்டத்தில் மதிப்பீட்டுக்கல்வியைப் பாடமாக வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கு தேவையான பாடப்புத்தகம் எதுவும் இன்னும் சரியாக வரவில்லை. ஒருவேளை பாட்திட்டமே வகுக்கப்படாவில்லையோ என்னவோ தெரிய வில்லை. ஆனால் இந்த புத்தகம் அந்த தேவையை தீர்க்கிறது. அதன் பிரிவுகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக உள்ளன. இந்த புத்தகம் கதவுகள் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வருகிறது.

Wednesday, December 17, 2008

தமிழ் படைப்பாளிகளின் கவிதைப் போர் : காலத்தின் எழுத்து

காலத்தின் நீண்ட மௌனத்தை எறிந்து தங்கள் குரலைப் பதிவு செய்து இருக்கின்றனர் தமிழின் தீவிர படைப்பாளிகள். அரை நூற்றாண்டாய் துயரத்தின் மீது தகிக்கும் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற தமிழர்களின் மனங்களில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொடக்க காலங்களில் இலங்கையில் வெலிக்கடைச் சிறையில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட குட்டிமணி ஜெகன் மறைவுக்குப் பிறகு ஒரு பெரும் எழுச்சி ஈழத்தமிழர் பிரச்சனையில் இங்குள்ள தமிழருக்கு ஏற்பட்டது. அது தமிழக அரசியலில் ஒரு பகடைக்காயாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசும் இயக்கங்கள் மட்டுமே ஈழப்பிரச்சனையில் தொடர் அக்கறையை செலுத்தி வந்தன என்றால் அது அவ்வளவு தவறில்லை. கொடுங்கனவாய் முடிந்துப் போன ராசீவ் காந்தி மரணத்துக்குப்பிறகு ஈழத்தமிழர் பிரச்சனைப் பற்றிப் பேசுவது அனேகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எனலாம்.
துன்பப்படும் மக்கள்துயரின் காத்திரத்தைப் பேசினால் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாக அது மாற்றப்பட்டது. வைகோ,நெடுமாறன் போன்றோர் பேசியதற்காகவே நெடு நாளைய சிறை தண்டனையைப் பெற்றனர். பிறகான காலக்கட்டங்களில் எத்தனையோ அழிவுகளை சிங்கள பேரினவாத ராணுவம் தமிழ்மக்கள் மீது நடத்தியது. யாழ் நூலக அழித்தொழிப்பு,செம்மணி புதைகுழி,செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலை என்று பட்டிலிடமுடியாத எத்தனையோ அழிசெயல்களை இலங்கை ராணுவம் செய்தது. உலக அரங்கில் அதற்குப் பின் இப்போது ஈழத்தில் நடந்துவரும் கடும்போரில் தமிழருக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் எல்லாம் இங்குள்ளவர்களின் மனசாட்சியை உலுக்க திரண்டது மக்கள் எழுச்சி.ஒரு சில அரசியல் கட்சிகள் தவிர மற்றைய கட்சிகள் தமிழீழம் என்ற கருத்தி உடன்பாடில்லாத இடதுசாரிகள் கூட இந்த எழுச்சியில் பெரும் அக்கறைக் காட்டினர். தீவிரமாக அரசும் இதில் கவனம் செலுத்தியது. அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி போர் நிறுத்தத்தை வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியது.
இந்நிலையில் தமிழ்த்திரையுலகின் போராட்டம் குறிப்பிடத்தக்கது.அக்டோபர் 19ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைப்பெற்ற திரை உலக போராட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் உள்ள அச்ச உணர்வினை நீக்கியது. இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோரின் வரலாற்று ரீதியான அரசியல் விரவிய உரை தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் உள்ளத்திலும் பொதுவான அறத்தன்மையை ஏற்படுத்தியது. அதற்குப்பிறகான அனைத்துக் கட்சியின் தமிழர் சங்கிலிப் போராட்டம் கொட்டும் மழையில் 100 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.
தொடர்ந்துப் பல்வேறு மக்கள் அமைப்புகள் ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குரலை உயர்த்தியது.ஆனால் அறிவுலகம் எனப்படும் படைப்பாளிகள் அடர்ந்த மவுனத்தைக் கடைப்பிடித்தனர். பாப்லோ நெரூடா, மொகமத் தார்வீஷ் போன்றோரின் கவிதைகளையும் சேகுவேராவின் புரட்சியையும் சாவேசின் அமெரிக்க எதிர்ப்பையும் சிலாகித்து பத்திகளாக கட்டுரைகளாக எழுதிக்குவிக்கும் தமிழ் எழுத்துலகம் தலித்துகளின் மீதான வன்முறையானாலும் சரி வேறுஎந்த பிரச்சனையிலும் தன்னை உட்படுத்திக்கொள்ளாத எச்சரிக்கை உணர்வுடனேதான் இயங்கிவந்திருக்கிறது. 19 ஆண்டுகாலமாக தலித் மக்களைப் பிரித்துவைத்த உத்தபுரத்தின் சுவர் வெளிச்சத்திற்கு வந்தபின் எத்தனை தமிழ் படைப்பாளிகள் தங்கள் வருத்தத்தையோ கோபத்தையோ பதிவு செய்தனர்? கயர்லாஞ்சியின் கொடுமைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டும் படைப்பாளிகள் ஒரு இயக்கமாகி ஏதும் சொல்லவில்லை.அதே போல ஒரிசா கர்நாடகாவில் கிறித்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை படைப்பாளிகள் அரங்கம் கண்டுகொள்ளவில்லை.
உலக அளவிலான வன்முறைகளயும் விடுதலைப்போராட்டங்களையும் மாங்கிமாங்கி எழுதும் நம் படைப்பாளிகள் நம் மொழியைப் பேசுகின்ற சொந்த சகோதரர்கள் துன்பப்படும்போது வாய்மூடி இருப்பதான கோரம் வேறு எதுவுமில்லை.
அதைத்தான் இக்கட்டுரையின் முதலில் சொல்லியிருந்தேன்.மவுனத்தைக் கலைத்த கவிஞர்கள் லீனா மணிமேகலைக்கும் சுகிர்தராணிக்கும் நன்றியைத் தெரிவிக்கலாம்.
இவர்கள் ஒருங்கிணைத்த தமிழ் படைப்பாளிகள் பங்கேற்ற கவிதைப் போராட்டம் சென்னை காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. காவல்துறையின் அனுமதிப் பெறுவதற்கு பெரும்பாடு பட்டதாக அவர்கள் கூறியது தமிழ்நாட்டில் தமிழர்களாகத்தான் நாம் வாழுகிறோமோ என்ற அய்யத்தை எழுப்பியது. அதற்கான நிபந்தனைக் கடிதத்தையும் படித்தபோது அந்த உணர்வு இன்னும் மேலோங்கியது.
தமிழ் படைப்புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் வந்திருந்தனர். ராமேசுவரத்திலிருந்தும் இன்னும் பல மூலைகளிலிருந்தும் படைப்பாளிகள் வந்திருந்தது சிறப்பு. எந்தவிதமான அறிக்கையோ சுவரொட்டியொ இல்லாமல் வெறுமனே தொலைபேசி, குறுஞ்செய்திகள் ஆகியன மூலமே தகவல் பரப்பப்பட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை என்று எந்த அரசியலும் இல்லாமல் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று சனநாயகத்தன்மை இருந்தது படைப்பு நேர்மையைக் காட்டியது.
கனிமொழியும் தமிழச்சியும் மிகவும் தங்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைத் துறந்து படைப்பாளிகள் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வில் பங்காற்றியது அடுத்த தலைமுறை அரசியலின் போக்கை கணிக்கவைத்தது.
எழுத்தின் ஆங்காரத்தோடு ஒரு பயணியாக அறியப்படும் கோணங்கி நவீன கவிதைத் தளத்தில் மட்டுமே இயங்கக்கூடிய இன்னும் பிற கவிஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த நிகழ்வில் பங்காற்றியது பெருமைக்குரியதும் பொறுப்பானதும் ஆகும்.

Tuesday, December 2, 2008

கவிதை ஒலிக்கும் அரங்கம்


நவீன தளத்தில் இயங்கக்கூடிய தமிழ் கவிஞர்கள் முதல் முறையாக சென்னையில் ஒரு கூடுகையை நடத்துகின்றனர். வெறுமனே பயிற்சி பட்டறைகளையும் குளிரூட்டப்பட்ட அறைகளில் கவிதைகளை வாசித்தும் நிகழும் நிகழ்ச்சியாக இல்லாமல் புது தளத்திலே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சி
ஒருநாள் முழுக்க சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது. 100 கவிஞர்கள் கவிதைகளை வாசிக்கப்போகின்றனர். ஈழத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இனப்படுகொலையின் கோரத்தை அதன் கொடூர மனப்போக்கை மொழி இனம் தேசம் என்ற எல்லைகளைக்கடந்து மனிதர்கள் என்னும் அடிப்படையில் அங்கு போர் நிறுத்தம் நடைமுறைப்
படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. ஈழப்பிரச்சனையில் இந்தியா தலையிடக் கோரி பல்வேறு நிலைகளில் அரசியல் அரங்குகளில் தற்போது போராட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. திரையுலகினில் பல மட்டங்களில் இதற்கான போராட்டங்கள் நிகழ்ந்தன. அதுமட்டுமல்ல தங்களின் இனவுணர்வினால் அரசின் கெடுபிடிகளால் இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு இன்றுவரை வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் அறிவுச்சூழலிலிருந்து எந்தக் குரலும் இதற்காக ஒலிக்கவில்லை என்ற வெற்றிடம் நிரம்பியிருந்தது.
மொழியின் குழைவுகளிலும் அதன் தீராத சமவெளிகளிலும் தங்களைக் கட்டமைக்கிற படைப்பாளிகள் ஏன் இப்படி அமைதிக்காக்கின்றனர் என்ற கேள்வி வாசகத்தளத்திலும் இருந்துவந்தது. நடிகர்களுக்கு இருக்கும் உணர்வு வெளிப்பாட்டுத் தன்மை உணர்வுகளையே வாழ்வாகக் கொண்டு படைப்புக்கலனாகக் கொண்டு இயங்கும் தமிழ் படைப்பாளிகளுக்கு
இல்லையோ என்ற ஏக்கம் இருந்தது.
அந்த எதிர்ப்பார்பை நிறைவு செய்யும் வகையில் மட்டுமில்லை உள்ளப்பூர்வமாக படைப்பாளிகள் வெறும் காகிதத்தில் மட்டுமில்லை தேவையானால் களத்தில்கூட இறங்கக்கூடியவர்கள்
என்ற பொறுப்பினை உலகுக்கு எடுத்துக்காட்ட சில பெண் படைப்பாளிகள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சிக்கான முன்கையை எடுத்து தொடர்ந்து செயலாற்றிவருகின்றனர்.அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். நாம் வேண்டுகின்ற நியாயமான பெண் தலைமை இங்குதான் தொடங்குகின்றது என்று நான் கருதுகிறேன்.அதற்காகவே இந்தப் போராட்டத்தில் அனைவரும் என்பதும் அவா. கோரிக்கையின் நியாயம் வலியுறுத்துகிற அவசியம் மிகவும் முக்கியமானது. நெடுங்காலம் அவதியுறுகிற மக்களின் பின்னால் நிற்பது
மனிதத்தன்மை. அதனடிப்படையிலும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நர்மதா நதிப்பிரச்சனையிலும் காஷ்மீர் பிரச்சனையிலும் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்குறித்த பிரச்சனையிலும் தன்னுடைய கருத்தினை வலுவாக வைத்து ஒரு எழுத்தாளர் எவ்வளவுதான் புகழ் அடைந்திருந்தாலும் அதை தூக்கி தூரவைத்துவிட்டு துயரப்படும் மக்களுக்காக பாடு எடுக்கக்கூடிய பண்பு அருந்ததிராயின் ஆளுமையை வெளிபடுத்தியது. அவருடைய கருத்துக்களால் அப்பிரச்சனைகள் மீதான கவனத்தின் வெளிச்சம் மிக அதிகமாக குவிக்கப்பட்டது. அந்த வகைமையில் இப்போது ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழ் இலக்கிய படைப்பாளிகள் தங்கள் குரல்களை படைப்புகளின் வழியாக வெளிப்படுத்த ஒரு போராட்ட வடிவமாக கவன ஈர்ப்பின் குவிமையமாக அது அமைய இருக்கிறது இத்தகைய நிகழ்வுகள் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல உலகளாவிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவமாக மாற இருக்கிறது. உலக தமிழர்களின் கவனத்தை
ஒரு புள்ளியில் மையப்படுத்தும் இந்நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இதற்கான முன் முயற்சியில் ஈடுபட்டுள்வ்ள தோழர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியோர்.போற்றுகிறோம்.

Monday, November 24, 2008

எண்தேர் செய்யும் தச்சன்


2008 ஆகத்து மற்றும் அக்தோபர் தலித் முரசு இதழ்களில் தலித்சூழலில் ஒரு புதிய உரையாடலைத் துவக்கியிருக்கிறார் பேராசிரியர் அய்.இளங்கோவன். வேலூர் ஊரிசுக்கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவாராக இருக்கும் இவர் சில நேரங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசப்படுவர். அப்படி தொற்றிக்கொள்ளும் பரபரப்பின் அழுத்தத்தில் அன்றைய மாலை இதழ்கள் மற்றும் மறுநாளைய காலை இதழ்களில் உயர்நீதிமன்ற முக்கியமான தீர்ப்பினை படிக்கலாம். ஒரு இயக்கம் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் தான் ஒருவரே இழுத்துப்போட்டுக்கொண்டுச் செய்யும் அவரின் தனித்தன்மை எண்ணற்கரியது. நிரப்பப்படாமல் இருந்த 500 க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கான விரிவுரையாளர் பதவியை போட வேண்டி இவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில்தான். ஆனால் தமிழக அரசு தானே வழங்கியதாக தம்பட்டம் அடித்துக்கொள்வது கொடுமை. புதிய புதிய செய்திகளைச் சிந்தித்து அவற்றை நடைமுறைப் படுத்த தேவையான தரவுகளைத் திரட்டிக் கொண்டு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் இவர் தயாரித்த வழக்கின் பிரதிகள்.
எழுத்தால் அசைக்க முடிந்த நீதியின் இருண்ட பக்கங்களை தன் பலங்கொண்ட மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் திருப்ப நினைப்பவர் அய்.இளங்கோவன்.தன்னுடைய வருவாயின் பாதிக்குமேல் அதற்காகவே பயன்படுத்துபவர்.
மேற்கூறிய இதழகளில் காலங்காலமாய் பேசப்பட்டுவந்த இடஒதுக்கீட்டின் பயன்பாட்டினால் ஏற்பட்ட குறைந்த பட்ச மாற்றங்களினால் பிரதித்துவம் என்ற சனநாயக அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அறைகூவல் பொது புத்தியை நோக்கி விடப்பட்டுள்ளது.தனியார் துறைகளில் இடஒதுக்கீடு கேட்பது என்பது எவ்வளவு நியாயம்? இன்றைக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் கறுப்பினத்தைச் சார்ந்த ஒபாமா கோலோச்ச வருவது என்ற மாற்றம் இன்று நேற்று வந்ததல்ல. ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாய் இருக்கிறோம் என்று உணர்ந்த காலத்திலிருந்து தொடங்கியது அது. மார்டின் லூதர்கிங், மால்கம் எக்ஸ் போன்ற போராளிகள் எத்தனையோ கறுப்பின எழுத்தாளர்கள் நெல்சன் மண்டேலா போன்றோர் ஏற்படுத்திய எழுச்சிதான் அது. அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் கறுப்பின மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. தனியார் துறைகளில் ஜி இ சி போன்ற பெரும் நிறுவனங்களில் எல்லாம் நிர்வாக அமைப்பில் கறுப்பின மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவற்றின் உச்சப்பட்சமாகத்தான் ஒபாமாவின் தேர்வு.ஆனால் இத்தகைய நிலை இந்தியாவில் இல்லை. தலித் மக்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை அரசுத்துறைகளில் மட்டுந்தான் கேட்கிறார்கள். அதுவே இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தனியார் துறை இடஒதுக்கீடுப் பற்றி பேசப்பட்ட்து. பல்வேறு உயர்சாதி பார்ப்பன பனியா நிறுவனங்கள் தகுதி திறமை என்ற சொற்களை வைத்து அரசின் வாயை அடைத்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் இன்னும் 17 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் விடியலை சுமந்து வரும் ஒற்றைச் சூரியனைப்போல ஒரு குரல் ஓங்கிக் கேட்கிறது. இடஒதுக்கீட்டின் நிலை சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியுள்ளது? முழுமையாக நிறைவேற்றப்படுகின்றதா? உரிமைகளுக்காக போராடும் இந்தியச் சிறுபான்மையர்கள் தலித் மக்களின் உரிமைகளை மதித்தார்களா என்பது தான் அந்தக் குரல். சிறுபான்மை மக்கள் நடத்தும் நிறுவனங்களில் யாரும் தலையிட முடியாது என்ற தருக்கம் தாண்டி அறங்களை தன் பக்கம் வைத்துக்கொண்டுதான் அது தனித்து துணிந்து உரைக்கிறது.மக்களால் தரப்படும் வரிப்பணத்தில் பெறப்படும் சலுகைகளின் அடிப்படையில் இந்நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அரசின் சாலைகள், அரசு தரும் ஊதியம் இவற்றைப் பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள் தங்களை சிறுபான்மை மக்களுக்கானவைகளாக மட்டுமே காட்டிக்கொள்கின்றன. இன்னும் சொல்லப் போனால் தங்களுக்கு எதிரானவர்களையே தலைமைப்பொறுப்புகளுக்கும் கொண்டுவைத்திருக்கின்றன என்றால் அது பொய்யில்லை.
இத்தகு சூழ்நிலையில் தான் திரட்டிய தரவுகளை முன்வைத்து சிறுபான்மை நிறுவனங்கள் எங்ஙனம் தலித்துகளின் உரிமைகளுக்கும் அவர்களுக்கான பிரதிநிதித்துவ முன்னுரிமைக்கும் இடைஞ்சலாக இருக்கின்றன என்பதை தெள்ளிதின் கூறியுள்ளார். அது முழுமையும் உண்மையாகவும் மறுக்கமுடியாத்தாகவும் இருக்கிறது என்பது அப்பட்டமான மெய். பேரா.அய்.இளங்கோவன் அவர்களின் இத்தகைய தனித்துவமான உண்மைக்காய் ஓங்கி ஒலிக்க கூடிய குரல் மனசாட்சியின் சத்தமாய் வீறிட்டு கிளம்பி நீதிமன்றத்தின் தீர்ப்பு மேசைகளில் அசைகிறது. இதுவரை எத்தனையோ பொதுநல வழக்குகளில் வெற்றிப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைகளை தந்தாலும் தன்னை முன்னிருத்திக் கொள்ளாத அவரின் பெருந்தன்மை மிகுந்த போற்றுதலுக்குரியது.
புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதைப்போல தேரை பின்னுக்குத் தள்ளாமல் முன்னுக்குத்தள்ளுவதில் முதன்மயான்வராகவும் புதிய புதிய தேர்களைச் செய்யக்கூடியவராகவும் விளங்கிவருபவர் பேரா.அய்.இளங்கோவன் அவர்கள்.

Saturday, October 18, 2008

கத கேளு..கத கேளு



அந்த வேளையில் எதுவும் என்னால் பேசமுடியவில்லை. பேசவே முடியவில்லை என்னும்போது ஏதாவது எப்படி செய்வது? அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை.ஏதேதோ எண்ணியிருந்தான் போலும். அவ்வப்போது சுருக்கம் முகத்தில் வந்து வந்து சென்றது. கொஞ்ச நேரம் இருவருமே பேசாமல் இருந்தோம். கைகள் எதையோ நோண்டிக்கொண்டிருந்தன. வானம் அப்பொழுதுதான் மேகங்களைத்திரட்டிக் கொண்டிருந்த்து. அடுத்தக் கட்ட நடவடிக்கைப் பற்றி அறிவிப்பு வராதா என ஏமாந்து நிற்கும் மக்களைப் போல என் கைகளைலிருந்த பேனாக்கள் விழுந்தன. பேனாக்களைப் பற்றிய விவரம் அறிவதற்குள் அதனுள் இருக்கும் மை தீர்ந்துவிட்ட்தாக நினைத்தன பேனாக்கள்.

Sunday, October 5, 2008

ஆழம்

அத்தனையும் உன் மேல் சுமத்தப்பட்டவை
அதன் பாரம் தாளாமல் அழலாம் நீ
அதிகாரத்தின்ஆளுமையின் கைகள் முறுக்கிய உன் கைகளின்குறுத்தெலுகம்புகள் உடையலாம்
கிட
வலிகளின் மேன்மை தங்கிய உன் உடல்
முழுதும்துடிக்க துடிக்க கிட
கொஞ்சமும் சுரணையற்றஅவற்றைவிட
வலிகளூடே வாழும் உன் வாழ்க்கைஉன்னதமானது।