Tuesday, August 11, 2009

ரூமிக்கு விருது


நாகூர் ரூமி என்னும் இலக்கிய ஆளுமையைப் பற்றி சன் தொலைக்காட்சி வீரபாண்டியன் கூறியதை இங்கே நான் இப்போதே சொல்லிவிடுகிறேன். நாகூர் ரூமி 'எழுத்து அசுரன்' என்பது தான் அது. அவருடைய உழைப்பு என்பது அசுரத்தனமானது ஆனால் அவரது எழுத்து என்பது 'அஜ்ரத்' தனமானது. அஜ்ரத் என்னும் அரபி சொல்லுக்கு குரு என்று பொருள்.


பல தலைப்புகளில் தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தும் ரூமிக்கு நல்லி-திசை எட்டும் மொழிபெயர்ப்பு கிடைத்திருக்கின்றது. இலியட் என்னும் ஆகப்பழைமையான கிரேக்க காப்பியத்தினை ஆங்கிலம் வழி அவர் தமிழுக்குத் தந்துள்ளார். அவர் மொழி பெயர்ப்பின் பிரதி , மூலத்தினை நகலெடுக்கும் வேலையினாலானது அல்ல. ஆனால் அதை உள்வாங்கிக்கொண்டு தன்னுடைய படைப்புச் சாயலாகவே தருவது எனபது அவரின் தனித்தன்மை.

விருதுகள் என்பவை ஒரு கலைஞனுக்கு ஊக்கத்தை தரக்கூடியது. கைத்தட்டலும் பாராட்டலும் ஒரு கலைஞன் வாழும்போதே அவனுக்குத் தரப்படவேண்டும்.அதுவும் அவன் இளமையாக இருக்கும்போதே தரப்படவேண்டும். அப்போதுதான் அவன் கொண்டாடப் படுவான். ஆனால் தமிழ்ச்சூழல் அப்படியானதாக இல்லாமல் போனது வருத்தத்திற்கு உரியது. எழுத்தாளன் வயதான பின்போ அல்லது இறந்த பின்போ அவனைப் போற்றி புகழ்ந்து என்ன லாபம் இருக்கப் போகிறது.

ஆனால் நல்லி விருது திறமையானவர்களுக்குப் போய் சேர்ந்திருக்கின்றது என்பது மிகவும் முக்கியமானது. அதுவும் விருது வழங்குவதில் எந்தவிதமான அரசியலும் குழுமனப்பான்மையும் இல்லாமல் கொடுக்கப் பட்ட்டிருக்கின்றது திறமையாளர்களுக்கும் குழு மனப்பான்மை ஏதும் அற்று தனிமையில் இயங்கும் ஆற்றலுள்ள ரூமி போன்றவர்களுக்கு கிடைத்திருப்பது திசை எட்டும் இதழுக்குரிய தகுதியை அதிகப் படுத்துகிறது. மொழிபெய்ர்ப்பு இதழாக தமிழில் வந்துகொண்டிருக்கும் திசை எட்டும் சிறந்த பணியினை ஆற்றியிருக்கின்றது.

நாகூர் ரூமி இருபத்தி ஏழு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கின்றார். படைப்பு வெளியைத் தாண்டி சுயமுன்னேற்ற புத்தகங்கள் போன்றவையும் அதில் அடங்கும். ரூமி எழுதும் முறையினைப் பற்றி சொல்ல வேண்டும் இரவு ஆரம்பித்து விடியல் நான்கு மணிவரை அவர் தொடர்ந்து கணிப்பொறியில் தட்டச்சுவார். மீண்டும் ஏழு மணிக்கு மேல் தொடங்கிவிடுவார். இந்த அர்ப்பணிப்பும் அயராத உழைப்புமே அவரை விருது பெற வைத்திருக்கின்றது எனில் அது புகழ்ச்சி இல்லை மெய்.

No comments: