Tuesday, March 31, 2009

கூத்தும் கூத்து சார்ந்த கொடுமையும்



ஒரு வழியாக முடிந்தது போலிருக்கின்றது தொகுதி உடன்பாடுகள். திமுக அணியும் அதிமுக அணியும் முடிவுற்ற சூழல் நிலவுகிறது. வழக்கம் போல தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும்
சண்டைவிடும் வேலையை இரு கழகங்களும் செய்து முடித்திருக்கின்றன. அணி மாறி போட்டியிட மாட்டோம் என்று முழுமையாக ராமதாஸை நம்பிய திருமா தொகுதி மாறிக்கூட
போட்டியிடாத ராமதாஸின் தமிழ் தேசிய உணர்வினை இன்னும் நம்புவார் என்று நினைக்க முடியவில்லை. ஈழத்தமிழர் பிரச்சினையினை தேர்தல் பிரச்சினையாக வைக்க
இனி ஜெயலலிதாவை தவிர யாரும் இல்லை என்னும் நிலையைத்தான் உருவாக்கி வைத்திருக்கின்றனர். யாரிடம் தமிழர்கள் தங்கள் தேசிய உணர்வினை வெளிப்படுத்த வேண்டுமோ
அவர்கள் சொல்லுவதற்கு இனிமேல் கட்டுபட்டு நடப்பதாக உறுதிக்கூறிய பிறகுதான் அண்ணன் தங்கை பாசமே மலர்ந்திருக்கின்றது. கருணாநிதியிடம் இப்படி ஒரு உறுதியை
ராமதாஸ் தரவில்லையோ. சரி அடுத்த சட்டமன்ற தேர்தலில் மறக்காமல் கருணாநிதி ராமதாஸிடம் இவ்வுறுதிமொழியை வாங்கிவிடுவாராக.
அதிமுக கூட்டணியில் முதன்மைக் கூட்டாளியாக இருந்த மதிமுக இப்போது என்னவாக இருக்கின்றது? தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை திமுக தரவில்லை
என்பதற்காக கடந்த தேர்தலில் திமுக மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வெட்டுருக்களைக்கூட மறந்துவிட்டு இரவோடிரவாக அதிமுக அன்புச்சகோதரியின் கூடாரத்திற்குப் போன
வைகோ இப்போது தன்மான உணர்ச்சியினை எங்கு வைப்பார்? இப்போதுதான் உள்ளே வந்த பாமக விற்கு ஏழு தொகுதிகள் ஒரு மக்களவை என்றும் எந்தெந்த தொகுதிகள்
என்றும் முடிவாக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் அண்ணனுக்கு தயாராக தட்டில் சீட்டுகளை வைத்திருக்கும் சகோதரிக்கு கூடவே இருந்த சின்ன அண்ணன் இன்னும்
போயஸ் தோட்ட சமையலறையின் வாசலில் நிற்பது தெரியாமலே இருக்கின்றது.சட்டமன்றத்தில் எதற்காக வருகிறோம் என்று தெரியாமலேயே அதிமுக உறுப்பினர்கள் வெளியே
வந்த உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களைப்போலவே வெளியே வந்த மதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தையே முற்றுப்பெறவில்லை. கேட்பது எத்தனை கிடைப்பது எத்தனை என்பதனை
உணர்ச்சிப் பெருக்கோடு வைகோ சொல்வார் என எதிர்பார்க்கலாம்.
பொதுவுடைமை தோழர்கள் காங்கிரஸ் சீனாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்திருப்பார்கள் என்றால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினையே கிடையாது. நந்திகிராமில்
விவசாயிகள் மீது அவர்கள் நடத்திய தாக்குதல்தான் நமக்கு ஞாபகம் வந்து தொலையுதே. அவர்களும் சீட்டுக்காகத்தான் இந்த ஆட்டத்தையும் ஆடுகிறார்கள்.அதுமட்டுமல்ல
எனக்கு திடீரென்று இப்போது இன்னொரு பிரச்சினை நினைவுக்கு வருகிறது. மதுரை உத்தபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரை இடிப்பதற்காய் பாடாய் பட்டவர்கள்
அப்போது அதைகுறித்து எந்த ஒரு வார்த்தையும் சொல்லாத ஜெயலலிதா இப்போது எப்படி தோழர்களின் பிள்ளை சமூக எதிர்ப்பை அல்லது தலித் அல்லாத மக்களின்
எதிர்ப்பை தாங்கிக்கொள்வார்? தோழர்கள் இதைகுறித்து எதுவும் பேச மாட்டார்கள் என்று கருதுகிறேன். இருக்கட்டும்.
திமுக கூட்டணி திமுக 21 காங்கிரஸ் 16 விடுதலைச் சிறுத்தைகள் 2 முஸ்லிம் லீக் 1. பீகாரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் வெறும் மூன்று. முக்கிய மந்திரியாக
மத்திய அரசில் அங்கம் வகித்த லாலு ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரஸின் பலத்தை தீர்மானித்து தந்தவை. 80 இடங்கள் உள்ள உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ்
கட்சி ஆட்சியிலிருந்து இறங்காவண்ணம் காத்த கண்ண பரமாத்மா முலாயம் சிங் தர முன்வந்ததோ வெறும் 15 இடம். வடமாநிலங்களிலேயே இவ்வளவு பலவீனப்பட்ட
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 40க்கு 16 ஏன்? அவ்வளவு பலம் உள்ளதா காங்கிரஸ் கட்சி. எத்தனை பேர் இருக்கின்றார்களோ அத்தனைப்பேருக்கு ஒரு கோஷ்டி இருக்கின்றது
தொகுதிக்குப் பிறகு வேட்பாளர் தேர்வுக்குப்பின் பாருங்கள் காங்கிரஸ் வேட்பாளரை காங்கிரஸ் காரர்களே தொகுதிக்குகுள் விடமாட்டார்கள். அத்தகைய ஒற்றுமை வலிமை
கொண்டது. கட்சிக்குள்ளே ஒற்றுமையில்லாத காங்கிரஸ் நாட்டு ஒற்றுமைப் பற்றி என்ன செய்யமுடியும்? அதுவும் தமிழ்நாட்டில் தனித்து காங்கிரஸ் நிற்குமே என்றால்
கட்டுத்தொகையினை இழக்கும் கட்டாயம் அதற்கு வரும். அப்படியிருக்க ஏன் இத்தனை இடங்களை திமுக ஒதுக்கவேண்டும். தன்னுடைய ஆட்சியைக் காக்க பலமில்லாத
காங்கிரஸுக்கு இப்படி வாரி தருவது எப்படி நியாயம். தன்னுடைய பலத்தை விட காங்கிரஸ் அதிக பதவி சுகத்தை அனுபவிப்பது தமிழகத்தில்தான். அதுவும் தமிழர்களின்
உணர்வுகளுக்கு எதிராக இருந்துக்கொண்டே.
தொண்டர் பலமுள்ள கட்சி என்று பார்த்தால் திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் தான். ஆனால் அதற்கு இரண்டே இடங்களைத்தாம்
ஒதுக்கியிருக்கிறார்கள். இதுகூட திருமாவளவனின் அளவு கடந்த பொறுமையினால் கிடைத்தது. அவரின் வழக்கமான உணர்ச்சிவசப்படும் தன்மையினை இந்த முறை
கொஞ்சம் ஒதுக்கிவைத்ததால் வந்தது. திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை பொதுத்தலைமைக்கும் அதுமட்டுமல்ல தமிழ்தேசிய அரசியலை முன் இழுக்கும் தலைமையும்
அவருக்கு வந்து சேர்ந்தது. ஆனால் இந்த கூட்டணி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ்தேசிய அரசியல் தொடங்கிய அவரின் போக்கு தலித்
தோழமைகளை இழந்து நிற்கிறது.கூடவே இருப்பார் என்று கருதப்பட்ட ராமதாஸ் இப்படி மீண்டும் தன் சுய சாதிக்குள்ளேயே அமுங்கிவிடுவார் என்பதை திருமாவளவன்
அறியவில்லை.
இத்தனை கூத்துகளும் அரங்கேறும் இடமாக தமிழக அரசியல் இருக்கின்றது. இதில் தமிழ் சார்ந்த அடையாளமோ தமிழ் அரசியலோ இல்லை என்பது தான் உண்மை. வேறு
எந்த தேசிய இனத்திற்கும் இல்லாத கொடுமை இது. தன் தேசிய தன்மை இல்லாமலே தங்களை ஆளுபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அந்த இனம் பங்கேற்பது.

No comments: