Tuesday, December 2, 2008

கவிதை ஒலிக்கும் அரங்கம்


நவீன தளத்தில் இயங்கக்கூடிய தமிழ் கவிஞர்கள் முதல் முறையாக சென்னையில் ஒரு கூடுகையை நடத்துகின்றனர். வெறுமனே பயிற்சி பட்டறைகளையும் குளிரூட்டப்பட்ட அறைகளில் கவிதைகளை வாசித்தும் நிகழும் நிகழ்ச்சியாக இல்லாமல் புது தளத்திலே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சி
ஒருநாள் முழுக்க சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது. 100 கவிஞர்கள் கவிதைகளை வாசிக்கப்போகின்றனர். ஈழத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் இனப்படுகொலையின் கோரத்தை அதன் கொடூர மனப்போக்கை மொழி இனம் தேசம் என்ற எல்லைகளைக்கடந்து மனிதர்கள் என்னும் அடிப்படையில் அங்கு போர் நிறுத்தம் நடைமுறைப்
படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. ஈழப்பிரச்சனையில் இந்தியா தலையிடக் கோரி பல்வேறு நிலைகளில் அரசியல் அரங்குகளில் தற்போது போராட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. திரையுலகினில் பல மட்டங்களில் இதற்கான போராட்டங்கள் நிகழ்ந்தன. அதுமட்டுமல்ல தங்களின் இனவுணர்வினால் அரசின் கெடுபிடிகளால் இயக்குனர்கள் சீமான்,அமீர் போன்றோர் கைது செய்யப்பட்டு இன்றுவரை வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் அறிவுச்சூழலிலிருந்து எந்தக் குரலும் இதற்காக ஒலிக்கவில்லை என்ற வெற்றிடம் நிரம்பியிருந்தது.
மொழியின் குழைவுகளிலும் அதன் தீராத சமவெளிகளிலும் தங்களைக் கட்டமைக்கிற படைப்பாளிகள் ஏன் இப்படி அமைதிக்காக்கின்றனர் என்ற கேள்வி வாசகத்தளத்திலும் இருந்துவந்தது. நடிகர்களுக்கு இருக்கும் உணர்வு வெளிப்பாட்டுத் தன்மை உணர்வுகளையே வாழ்வாகக் கொண்டு படைப்புக்கலனாகக் கொண்டு இயங்கும் தமிழ் படைப்பாளிகளுக்கு
இல்லையோ என்ற ஏக்கம் இருந்தது.
அந்த எதிர்ப்பார்பை நிறைவு செய்யும் வகையில் மட்டுமில்லை உள்ளப்பூர்வமாக படைப்பாளிகள் வெறும் காகிதத்தில் மட்டுமில்லை தேவையானால் களத்தில்கூட இறங்கக்கூடியவர்கள்
என்ற பொறுப்பினை உலகுக்கு எடுத்துக்காட்ட சில பெண் படைப்பாளிகள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சிக்கான முன்கையை எடுத்து தொடர்ந்து செயலாற்றிவருகின்றனர்.அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். நாம் வேண்டுகின்ற நியாயமான பெண் தலைமை இங்குதான் தொடங்குகின்றது என்று நான் கருதுகிறேன்.அதற்காகவே இந்தப் போராட்டத்தில் அனைவரும் என்பதும் அவா. கோரிக்கையின் நியாயம் வலியுறுத்துகிற அவசியம் மிகவும் முக்கியமானது. நெடுங்காலம் அவதியுறுகிற மக்களின் பின்னால் நிற்பது
மனிதத்தன்மை. அதனடிப்படையிலும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நர்மதா நதிப்பிரச்சனையிலும் காஷ்மீர் பிரச்சனையிலும் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்குறித்த பிரச்சனையிலும் தன்னுடைய கருத்தினை வலுவாக வைத்து ஒரு எழுத்தாளர் எவ்வளவுதான் புகழ் அடைந்திருந்தாலும் அதை தூக்கி தூரவைத்துவிட்டு துயரப்படும் மக்களுக்காக பாடு எடுக்கக்கூடிய பண்பு அருந்ததிராயின் ஆளுமையை வெளிபடுத்தியது. அவருடைய கருத்துக்களால் அப்பிரச்சனைகள் மீதான கவனத்தின் வெளிச்சம் மிக அதிகமாக குவிக்கப்பட்டது. அந்த வகைமையில் இப்போது ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழ் இலக்கிய படைப்பாளிகள் தங்கள் குரல்களை படைப்புகளின் வழியாக வெளிப்படுத்த ஒரு போராட்ட வடிவமாக கவன ஈர்ப்பின் குவிமையமாக அது அமைய இருக்கிறது இத்தகைய நிகழ்வுகள் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல உலகளாவிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவமாக மாற இருக்கிறது. உலக தமிழர்களின் கவனத்தை
ஒரு புள்ளியில் மையப்படுத்தும் இந்நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம். இதற்கான முன் முயற்சியில் ஈடுபட்டுள்வ்ள தோழர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியோர்.போற்றுகிறோம்.

No comments: